Skip to main content

ஈரோடு மாவட்ட எல்லையில் திறக்கப்பட்ட மது கடைகள்....

Published on 04/05/2020 | Edited on 04/05/2020



கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 42 நாட்கள் இந்தியா ஊரடங்கு என்ற அறிவிப்பால் முடங்கி விட்ட நிலையில் குடிமகன்களின் வாழ்வில் இடியாய் விழுந்தது இந்தியா முழுக்க மூடப்பட்ட மது கடைகள்தான். 


இந்த நிலையில் நான்காவது ஊரடங்கு வருகிற மே-17 வரை உள்ள நிலையில் சில மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதனால் பூட்டிய விலங்குகள் உடைக்கப்பட்டதுபோல் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கம் குடிமகன்கள் மத்தியில் ஒரே சிந்தனையாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவும், ஆந்திராவும் இன்று மதுக்கடைகளை திறந்து விட்டது. 

தமிழக கர்நாடக எல்லை பகுதி ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ளது. இங்கு பண்ணாரி சோதனை சாவடியை கடந்து சென்றால் ஆசனூர் மலை கிராமம் வரும். அதை தொடர்ந்து வழியில் கர்நாடகாவில் உள்ள புளுஞ்சூர் மற்றும் எல்லகடை என்ற இரண்டு ஊர்களில் கர்நாடகா மதுக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டது. 

சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்ல வேண்டுமென்றால் கர்நாடகா எல்லையில் உள்ள இந்த இரண்டு மதுக்கடைகளையும் கடந்துதான் மீண்டும் தமிழக எல்லை தொடங்கும் தாளவாடிக்கு செல்ல முடியும். இன்று இந்த மதுக்கடைகள் திறப்பால் எல்லையில் உள்ள மக்கள்  மது வகைகளை வாங்கி சென்றனர். மேலும் கர்நாடகா "சரக்கு" தமிழகத்தில் ஊடுருவி விடக்கூடாது என தமிழக எல்லையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள். மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக மலைக்கிராம மக்களுக்கு கர்நாடக மதுக்கடைகள் அவர்களது தேவையை நிறைவேற்றுகிறது என்கிறார்கள் மலைவாசிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Bustle at the Erode counting center

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Bustle at the Erode counting center

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்திருந்தார். அதில், ‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் 27 ஆம் தேதி மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். 

Bustle at the Erode counting center

அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று முன்தினம் (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகின. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சமயத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர். ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Bustle at the Erode counting center

முன்னதாக வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் நேற்று (29.04.2024) மனு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில், ‘வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.