Skip to main content

‘ஜெயலலிதாவுக்கு அஞ்சினோம்; அடிபணிந்தோம்! மோடிக்கெல்லாம் நோ!’ -எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக மதுரையில் போஸ்டர்!

Published on 06/08/2020 | Edited on 10/08/2020

 

 

சுவர் விளம்பரமோ, பத்திரிக்கை விளம்பரமோ, அரசியல் கட்சியினர் அவ்வப்போது  ‘பளிச்’ என்று உண்மையைச் சொல்லிவிடுகின்றனர்.

 

மதுரையிலும்கூட, அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவாளர் ஒருவர், ‘அஞ்சுவதும் அடிபணிவதும் ஒருவருக்கே!’ என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக, அவரை வரவேற்கும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த போஸ்டர் மூலம் சில உண்மைகளை, ஆளும்கட்சியினர் பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றனர். அதாவது, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும், அவருக்கு அஞ்சியதையும், அடிபணிந்ததையும் பெருமிதத்தோடு சொல்கின்றனர். நேரடியாக கூற வருவது என்னவென்றால், ‘பிரதமர் மோடி போன்றவருக்கு ஒருக்காலும் அடிபணிய மாட்டோம். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்.’ என்பதுதான்! மறைமுக அர்த்தம் ஒன்றும் இருப்பதாக சொல்கின்றனர். அது, ‘ஜெயலலிதாவுக்கு தந்த மரியாதையை, சசிகலாவுக்கெல்லாம் தரவே மாட்டோம்’ என உறுதிபடக் கூறுவதுதான்! 

 

முதல்வரை வரவேற்கும் மதுரை மாவட்டத்தின் இன்னொரு அமைச்சர் தரப்பிலோ, ‘தென் தமிழகத்தின் பாதுகாவலரே ஆர்.பி.உதயகுமார்தான்..’ என விளம்பரம் செய்துள்ளனர். அதாவது, ‘தமிழகத்தின் வடக்கு பகுதியை எடப்பாடி பழனிசாமி, அல்லது யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடட்டும். தமிழகத்தின் தென்பகுதி ஆர்.பி.உதயகுமாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.’ எனச் சொல்ல வருகின்றனர். ‘அப்படியென்றால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் காட்டிலுமா..?’ என்று கேட்டால், ‘ஆமா.. அப்படித்தான்!’ என்று சட்டென்று பதில் வருகிறது, உதயகுமார் விசிவாசி ஒருவரிடமிருந்து.  

 

சும்மா சொல்லக்கூடாது, சொல்லி அடிப்பதில் மதுரை அரசியல்வாதிகள்  படு கில்லிதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.