Skip to main content

வீட்டில் ஜெயலலிதா திடீரென மயங்கினார்: டாக்டர் சிவக்குமார் பேட்டி

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


 

sivakumar jayalalitha


ஜெயலலிதா வீட்டில் திடீரென மயங்கியதால் லேசான முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று டாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார்.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலதரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதனை ஏற்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு டாக்டர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

 

இந்த நிலையில் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதன்படி 2-வது முறையாக டாக்டர் சிவக்குமார் இன்று ஆஜரானார். காலை 10.30 மணி அளவில் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரான சிவக்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். 

 

சிவக்குமாரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் ஆணையிட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளதாக மருத்துவர் சிவக்குமார் கூறியுள்ளார். 


செய்தியாள்ர்களிடம் பேசிய அவர், விசாரணை ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே சரும பிரச்சனைக்காக ஜெயலலிதா இரண்டு வாரம் ஸ்டெராய்டு எடுத்துக்கொண்டார். ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டதால் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கவில்லை. 

 

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே லேசான காய்ச்சல் இருந்தது. வீட்டில் திடீரென மயக்கமடைந்த காரணத்தினால் லேசான முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நான் உடனிருந்தேன். 2016 செப்டம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்