Skip to main content

டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020


 

டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் இன்று (18.05.2020) நடைபெற்றது. இரங்கல் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த் செல்வம் முன்னிலை வகித்தார்.
 


இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் நீதி வேண்டி இன்று வரை 11 ஆண்டுகள் கடந்தும் போராடுகிறார்கள். மேற்கண்ட போராட்டத்தை லண்டனில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, உலகளாவிய தமிழ் அமைப்புகளான கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழ் நடவடிக்கை குழு, உட்பட ஜெர்மணி, ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, இத்தாலி, பிரான்சு, நியூஸிலாந்து, நார்வே, தென் ஆப்ரிக்க, பெல்ஜியம் போன்ற உலகில் உள்ள 35 தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்து சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது.
 

கடந்த 2009 இல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையான நிகழ்வு அனைத்து நாட்டினரையும் வேதனை அடைய செய்தது. அங்கு நடந்த மனித உரிமை மீறலையும், போர்க்குற்றங்களையும் செய்த இலங்கையைத் தண்டிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வு விசாரணை வேண்டி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.
 


இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக இந்தியா ஐ.நா.வில் தமிழ் மக்களுக்காக இலங்கைக்கு எதிரான குரல் கொடுத்து முனைப்பு காட்ட வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.
 

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்ட ஏற்பாடுகளைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா செய்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வசந்த குமார், ஜெகன், மயில்சாமி, சிவகுமார், சாந்தகுமார், சரத், லோகேஷ், சித்ரகலா, வைஜெயந்தி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 விதியைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.