Skip to main content

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

ramadoss


சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன எனக் கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கரோனா பாதிப்பு மிகவும் தாமதமாகக் கண்டறியப்பட்டது தான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், நோய்த்தொற்று முற்றுவதற்கு முன்பாகவே, அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை தொடங்குவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

கரோனா வைரஸ் நோய்த் தாக்குதலால் தமிழ்நாட்டில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அடுத்த 4 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் வரை 0.67% ஆக இருந்து வந்த உயிரிழப்பு விகிதம், இப்போது 0.80% ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்றாலும் கூட, தமிழகத்தின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது நமக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது.

சென்னையில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் நோய்ப் பாதிப்புகள் மிகவும் தாமதமாகக் கண்டுபிடிக்கப்படுவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். நேற்று உயிரிழந்த 17 வயது சிறுமி தான் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் ஆவார். அவருக்கு முதல் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பது தான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.
 

 


தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் ஒரே தீர்வாகும். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இதைப் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; மருத்துவ வல்லுனர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை உணர்ந்து தமிழக அரசு கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா சோதனைகளை  அதிகரித்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி 11,094 சோதனைகளும் 3 ஆம் தேதி 14,101 சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று 16,447 சோதனைகளை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது சற்றுக் கூடுதலாகியிருக்கக் கூடும். அவர்களை விரைந்து கண்டுபிடித்து மருத்துவம் அளிக்க வேண்டுமானால், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேராவது ஒரு நாளைக்குக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது 74 ஆய்வகங்கள் உள்ள நிலையில், அவற்றில் தினமும் அதிகபட்சமாக 30,000 சளி மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். நேற்றைய நிலவரப்படி ஆய்வுகளின் எண்ணிக்கையை 16,447 ஆக அதிகரித்துள்ள தமிழக அரசு, படிப்படியாக முழுத்திறனையும் எட்டுவதற்கு முன்வர வேண்டும்.
 

corona


அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்றாலும் கூட, அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விட முடியும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது முழுக்க முழுக்க அரசின் கடமை என்று நினைத்து பொதுமக்கள் ஒதுங்கி இருந்துவிடக் கூடாது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான் என்பதால், அவர்கள் தான் அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகச்சிறிய அளவில் நோய் அறிகுறிகள் இருந்தால் கூட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று கரோனா ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அதேபோல், நோய்ப்பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை தொடங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது; அதுமட்டுமின்றி, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதும் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படுகிறது.
 

http://onelink.to/nknapp


எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளைப் படிப்படியாக 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக ஒரு சில நாட்களில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.