Skip to main content

ஆளும் கட்சிகளை அதிர வைத்த காங்கிரஸ் கட்சியின் அதிரடி முடிவு!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020
sonia gandhi



வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து செலவினை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி அறிவித்திருப்பது அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் இப்படி நிலைப்பாடு எடுக்கும் என உணராத மத்திய-மாநில அரசுகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றன! 
                      

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலும் மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. பொது போக்குவரத்தை திறந்து விட்டால், கரோனா வைரஸ் பரவலுக்கு அதுவே ஒரு காரணமாக மாறலாம் என்கிற மருத்துவத்துறையினரின் யோசனைகளை அரசுகள் ஏற்பதால் பொதுபோக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. 
                      

அதேசமயம், வெளி மாநில தொழிலாளர்களின் உணவு பாதுகாப்புக்கும், தங்கும் வசதிகளும் அந்தந்த மாநில அரசுகள் கவனித்துக்கொள்ளும் என அறிவிப்பு செய்திருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்த முடியாமல் தடுமாறுகின்றன. இந்த நிலையில், கையில் பணமும் பசிக்கு உணவும் கிடைக்காததால் தங்களை தங்களது சொந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்குமாறு பல இடங்களில் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர் வெளிமாநில தொழிலாளர்கள். இதற்கிடையே, தற்போது ஊடரங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசாங்கங்கள் முடிவு செய்திருப்பதாகவும், பயணத்திற்குரிய பணத்தை தொழிலாளர்கள் கொடுக்க வேண்டும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
                       

இதனை கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு செல்லும் பயணத்திற்குரிய கட்டண செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்திருக்கிறார். கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் சிவக்குமார், வெளிமாநிலத்திலுள்ள கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளர்களை கர்நாடகாவுக்கு அழைத்து வர 1 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கு கொடுத்திருக்கிறார். இந்த யோசனையை அனைத்து மாநிலத்திலும் கொண்டு வர வேண்டியதுதான் தொழிலாளர்களின் பயணக்கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என அறிவித்ததுடன், ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு உத்தரவும் போட்டுள்ளார் சோனியா . 
                         

சோனியாவின் உத்தரவை ஏற்று காங்கிரஸ் அறக்கட்டளையின் நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை தமிழக அரசிடம்  வழங்குவதற்கான முடிவை எடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து அறிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வர 1 கோடி ரூபாய் தமிழக முதல்வரிடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பணத்தை தமிழக அரசிடம் முறைப்படி வழங்குவார் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.  
  

காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி முடிவு ஆளும் கட்சிகளை அதிர வைத்திருக்கிறது!
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.