Skip to main content

திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
caonference1


திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நாள் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மாநாட்டு தொடக்க அரங்கில் ஆ.சிங்கராயர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநாட்டை திறந்துவைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வழக்கறிஞர் அருள்மொழி, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்ககேற்று சிறுப்புரையாற்றினர்.

இதையடுத்து மதியம் 12மணி அளவில், இளையோர் அரங்கம் நடைபெற்றது. சிற்பி செல்வராசு தலைமையில் மருத்துவர் தாயப்பன் தொடக்க உரையாற்றினார். பின், தோழர்கள் கவுசல்யா, சபரி மாலா, கிரேஸ்பானு, மணிரத்தினம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இதனையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் எழில்.இளங்கோவன் தலைமையில் கலையரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் தொடக்கவுரையாற்றினார். எழுத்தாளர் டான் அசோக் வாழ்த்துரையாற்றினார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

தீர்மானமுகவுரை:

பரந்துபட்ட மானுடத்தை சமூகத்தின் விடியலுக்கும், சிறந்த வாழ்வியலுக்கு சமூகநீதித் தேவைகளை ஆய்ந்தறிந்து சமுகநீதித்தத்துவத்தை முன்னிறுத்திய தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் மொழி, இனம், மதம், சாதி, பாலினம், வர்க்கம், வர்ணம் ஆகிய எவ்வித வேறுபாட்டையும் பாகுபாடாய் மாற்றுகிற, சுரண்டுகிற பார்ப்பனியத்தின் ஒடுக்குகிற ஆதிக்க மேலாண்மைச் சிந்தனையை எதிர்த்து, ஒடுக்கப்படுகிற மக்களோடு நிற்பதையும், அதற்கான களத்தில் எவ்வித சமரசமுமின்றி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை எந்நாளும் சமர்புரியும் என இம்மாநாடு மூலம் அறை கூவல் விடப்படுகிறது.

இச்சமூக நீதிக் கோட்பாட்டைப் பாதுகாக்கிறவகையில் போராடவும், பங்கேற்கவும், திராவிட இயக்கத் தத்துவ அரசியலை உணர்ந்து கனமாடவும், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும், குறிப்பாக, இளையதலைமுறையினரையும், ஒடுக்கபட்டமக்களையும் இம்மாநாடு இருகரம்நீட்டி அழைக்கிறது.

தீர்மானம் 1
இந்து சமய அறநிலையத் துறை


நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பதற்கான பெருமுயற்சி ஒன்று, தன்னலம் மிக்க கூட்டம் ஒன்றினால் இப்போது  தொடங்கப்பட்டுள்ளது.இந்தக் கோவில்களைக் இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்பதாக அக்கோரிக்கை முன் வைக்கப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இந்துக்கள் என்னும் பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர், மொத்தக் கோவில் சொத்துக்களையும் தாங்கள் மட்டும் அபகரித்துக் கொள்வதற்கான திட்டமே இது.

எனவே தங்களைக் இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வெகுமக்களின் சொத்துக்களைப் பார்ப்பனர்கள் பறித்துச் சென்றுவிடாமல் பாதுகாக்கும் கடமை, கடவுளின் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமின்றிப் பகுத்தறிவாளர்களும் உள்ளது. இந்துக்களும் பார்ப்பனர்களும் இடையில் தொடங்கியுள்ள இப்போரில் நாம் இந்துக்களின் பக்கம் நின்று, அறநிலையத் துறையை காப்பாற்றிட வேண்டும். மேலும், அரசின் பொறுப்பில் கோவில்கள் இருந்தால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை, கேராளவைப் போலத் தமிழ்நாட்டிலும் அடுத்து திமுக ஆட்சி வந்ததும் வந்துவிடும் என்பதாலும், அவ்வாறு கோவில்களை ஜனநாயகப் படுத்துதல் கூடாது என்று அவர்கள் கருதுவதாலும். அறநிலையத் துறையை அடியோடு கலைத்து விட வேண்டும் என்று கருதுகின்றனர்.

இச்சூழலில், கோடிக்கணக்கான இந்துக்களையும், நம் அனைவருக்கும் பொதுவான கோவில் சொத்துக்களையும் பார்ப்பனர்களிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

ஆதாலால், எக்காரணம் கொண்டும் இந்து அறநிலையத் துறை கலைக்கப்பட கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன், தில்லை நடராசர் கோவிலையும் தீட்சீதர்களிடம் இருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, வரும் நாள்களில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.         

தீர்மானம் 2
ஆணவப்படுகொலை எதிர்ப்பு

உலக உயிர்களின் இயற்கைப் போக்கான காதலை எதிர்த்தும், தன் வாழ்க்கைத்துணையை நானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமனித உரிமைகளை மறுத்தும், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

ஆணவக் கொலையின் பெயரில் நடக்கும் சாதிய வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற கொடூர செயல்களைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் புரிவோருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 3
திருநங்கையர்/திருநம்பியர்கான உரிமைகள்


சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் திருநங்கையர்/திருநம்பியர்க்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர் தம் குறைகளைக்களையவும் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4
நீட் நிரந்திரவிலக்கு


ஒரு நூற்றாண்டு காலப்போரட்டத்தின் மூலம் திராவிட இயக்கம் கல்வித்துறையில் நிகழ்ந்திருக்கும் சாதனைகளைத் தகர்க்கும் வகையில், நடுவண் அரசு கொண்டு வந்திருக்கும் நீட் எனும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்திர விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்காக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்மொழிவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற்றிடத் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இனி வரும் காலங்களில் கல்வித்துறையில் நடுவண் அரசின் தலையீட்டால் இது போன்ற சமூக அநீதிக்கு இடம் கெடாமல் தமிழக மாணவர்களின் நலனைக்காக்க மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கல்வி கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5
பெண்ணுரிமை


நில உடமைப் பிற்போக்குத் தனங்களிலும், சாதி. மதக்கட்டுபாடுகளிலும் ஊறிப்போன சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமத்துவ நிலையில் சமூகம் முன்னேறுவதற்கு உரிய வகையில் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்புகளிலும், அரசியல் அதிகாரத்திலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 6

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து கொடுக்கப்படும் இன்றைய சூழலில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாநில மற்றும் நடுவண் அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் முறையைக் கண்காணித்து, அரசிற்கு ஆண்டு தோறும் அறிக்கை அளிக்கும் வகையில், அதிகாரமிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7
பொதுமயானம்


பிறப்பின் வழி திணிக்கப்பட்ட சாதி  இழிவை, இறப்பிற்குப் பின்னரும் சுமந்து செல்லும் இழி நிலையை ஒழிக்கும் வகையில் தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மக்களும் அந்த மயானத்தை மட்டுமே பொதுவானதாகப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும்.

சாதிக்கொரு மயானம் என்பது சட்டப்படி தடை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 

caonference 2


இதன்பின், மாலை 4 மணியளவில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. புலவர் செந்தலை ந.கவுதமன் தொடக்கவுரையாற்றுகிறார். தோழர் ஓவியா, எழுத்தாளர்கள் இமையம், மதிமாறன் கருத்துரையாற்றுகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடக்கவுரையாற்றுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, காங்கிரஸ் கட்சி பீட்டர் அல்போன்ஸ், மனிதநேயமக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மாநாட்டு மலரைப் பெறுகிறார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரை வெளியிட்டு மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றுகிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி” - கி.வீரமணி

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

DK K Veeramani condemn Governor RN Ravi

 

ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார். ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். 

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; “தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற மேனாள் ஐ.பி.எஸ். அதிகாரி, வந்த நாள் முதல் இன்று வரை மாநில அரசின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிர்நிலையை எடுப்பதோடு, முழு ஒத்துழையாமையை திட்டமிட்டே நடத்தி வருவது கண்கூடு. தமிழ்நாட்டு சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாதபடி, சட்டப்பேரவையில் உரையாற்றுகையில், அரசமைப்புச் சட்ட வரைமுறைகள், மரபுகள் - எல்லாவற்றையும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, சட்டமன்றத்திலிருந்தே வெளிநடப்புச் செய்த விசித்திர வித்தகர் இந்த ஆளுநர். ஆளுநர் மாளிகைக்கும், அவரது செலவினங்களுக்கும் தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட தொகையைப் பன்மடங்கு கூடுதலாகப் பெறவும் அதை வெவ்வேறு செலவினங்களுக்குத் திருப்பிவிட்டு நிதியமைச்சரின் கேள்விக்கு ஆளாக்கப்பட்டுள்ளவரும் இந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.

 

ஆயுள் கைதி பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் தேவையில்லாமல் - அரசமைப்புச்சட்ட வரைவை மீறி, தானடித்த மூப்பாகவே நடந்துகொண்டது பற்றி உச்சநீதிமன்றத்தால் குட்டுப்பட்டதும், அதன்பிறகு மற்றொரு முறையிலும் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பற்றி இவர் கவலைப்படாது நடந்துகொண்டபோதும், ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி நடவடிக்கை வேண்டியவரே என்று உச்சநீதிமன்றம் சுட்டி, தட்டிக் கேட்டதும் இவரது ஆளுமை பற்றியே. நாளும் ‘சர்ச்சை நாயகனாகவே’ நடந்து ஊடக வெளிச்சத்தில் நின்று ஒரு போட்டி அரசினை நடத்தும் இவர், அடிக்கடி ராஜ்பவனத்தில் கூட்டங்கள் கூட்டி, தமிழ்நாடு அரசின் கொள்கை, திட்டங்களுக்கு எதிராகவே நடந்து தமிழ்நாடு அரசு வாக்களித்தத் தமிழ்நாட்டு வாக்காளர்களின் பொறுமையை எல்லையற்று சோதித்து, சில ஆதாரமற்ற ‘அஸ்திரங்களை’ ஏவி விட்டு, தனக்குத்தானே மகிழ்ந்து கொள்வதோடு, ராஜ்பவனத்தை ஒரு போட்டி அரசியல் கூடமாக்கிக் கொண்டு தன் போக்கில் நடத்துவதில் தனி ஆர்வம் காட்டுகிறார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்காமல், வேண்டுமென்றே கிடப்பில் போட்டு கிண்ணாரம் கொட்டுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்குப் புறம்பாகவே அமைந்து வருகின்ற இவரது நடவடிக்கைகள் - மக்கள் தலைவர்களால் நாளும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி அரசியல் ‘பல்லாங்குழி’ ஆட்டம் ஆடுகிறார். இவரது பல பேச்சுகள் அறியாமையின் அப்பட்டமாகவோ அல்லது ஆணவத்தின் உச்சமாகவோதான் தென்படுகின்றன. அண்மையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி அரசமைப்புச் சட்டப் பிரிவுகள்பற்றிய அவரது விளக்கம் கேட்டு, எப்படிச் சிரிப்பது என்றே எவருக்கும் தெரியவில்லை. இந்த அரசமைப்புச் சட்டத்தின் கூறு 200இன் படி ஒரு விநோத அறியாமை பொங்கிடும் அபத்தமான விளக்கத்தைச் சொல்ல, தனது “ஆழ்ந்த அரசமைப்புச் சட்ட அறிவை”(?) அகிலத்திற்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.

 

அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இன்படி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதக்கள் பற்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் (Assent to Bills) என்ற துணைத் தலைப்பில் உள்ளதற்கு - ஆளுநர், ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கலாம், சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம் (விளக்கம் கேட்கும் வகையில்) ‘With hold’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய அர்த்தத்தை தமிழ் அகராதியில் உள்ளதை ஆளுநர் ரவிக்கு நாம் சுட்டிக்காட்டி, அவர் பிழையை அவர் திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டுகிறோம். ‘With hold’  ‘நிறுத்தி வைத்தல்’ என்பதே பொருள். இவரது அகராதியில் ‘With hold’ என்றால், ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டது என்பது பொருளாம். இவரது முரண்பட்ட நடத்தைக்கு ஓர் உதாரணம் இது. மேலும், ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா முதலில் அவசரச் சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பிறகு அது நிரந்தரச் சட்டமாக்குவதற்குரிய மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

 

அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி, அதன் சட்ட வடிவத்திற்கு - மசோதாவிற்கு மட்டும் ஒப்புதல் தராமல் பல மாதங்கள் நிறுத்தி வைத்து சட்ட விளக்கம் கேட்கிறார். சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சென்று விளக்கம் அளித்த பிறகு, அதைத் திருப்பி அனுப்புகிறார். மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் Legislative Competence இல்லை என்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இடம்பெற்றதுதான் ‘Betting & Gambling’ சூதாட்டம்பற்றிய அதிகாரம். இதை முன்பே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதே பதிலைத்தான் அவர் அளித்தார். இதெல்லாம் ஆளுநர் அறியமாட்டாது தேவையில்லாமல் புது வியாக்கியானம் படைப்பதா? “மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அதை நிராகரித்தது என்றே பொருள்” என்று கூறி, தனது அரசமைப்புச் சட்ட அறியாமையை வெளிச்சம் போட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது அல்லவா.

 

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தகவல் தொடர்பாளராக (Spokesperson) உச்ச, உயர்நீதிமன்றங்கள் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்து, அதனைத் தட்டிக் கேட்டுப் போராடியவர்களை கொச்சைப்படுத்திப் பேசி கண்டனத்திற்குள்ளானார். தமிழ்நாடு அரசின் (அ.தி.மு.க. அரசு) கொள்கை முடிவு என்று நீதிமன்றங்களே ஏற்ற நிலையில், இவரது அதிகப் பிரசங்கித்தனம் அநியாயம் அல்லவா?

 

தமிழ்நாட்டுத் தலைவர்கள் விரைவில் ஆளுநருக்கு எதிராக - இந்தத் தொடர் தொல்லை நிலைப்பாட்டிற்கு எதிரான ஓர் அறவழிப் போராட்டம்பற்றி யோசித்து முடிவெடுக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், “ஆளுநர் சர்வாதிகாரியாக தன்னை நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது” என்று மனம் நொந்து கூறியிருப்பதும் - அவரது அடாவடித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. ‘மக்கள் தீர்ப்பே இறுதி’ என்ற அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் திரளுவதுதான் ஒரே வழி. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைத் தேக்கத்திற்குரியதாக்கி, நியமன அதிகாரியானவருக்கு எவ்வகையில் நியாயமோ,  உரிமையோ உண்டா என்ற கேள்வி எங்கும் எதிரொலிக்கட்டும். எதிர்ப்புப் புயல் மய்யம் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 


 

Next Story

“குழந்தை திருமணங்களில் தீட்சதர்கள் கைது செய்யப்படுவது பாராட்டுக்குரியது” - கி.வீரமணி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

"The arrest of Dekchathers in child marriages is commendable" - K. Veeramani

 

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் தி.க தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். 

 

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “முன்பிருந்த காலத்தை விட தற்போது பெரியாரியம் அதிகம் தேவைப்படுகிறது. மதவாதம், ஜாதிவாதம் தலை தூக்கி ஆடுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேத பாட சாலையில் படித்தவர்கள் பத்தாவது, 12 வது படித்ததற்கு சமம் என பா.ஜ.க அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என கூறி இருக்கிறார்கள். இது பிற்போக்கு தனமான கண்டிக்கதக்க நடவடிக்கை. கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால்  இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது.

 

இது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதில் குற்றம் குறைகளை கூறுகிறார்கள் அவர்களிடமிருந்து இந்த அரசை காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் குறிப்பாக தி.க.வின் கடமையாக உள்ளது.

 

சட்ட விரோத குழந்தை திருமணம்; அடுத்தடுத்து கைதாகும் சிதம்பரம் தீட்சிதர்கள்

 

குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால் சிதம்பர தீட்சதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட குற்றவாளிகளாக, தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள்.

 

ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியான கருத்து. அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. வேதங்களில் கூட இந்து என்கிற வார்த்தை கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என நீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன.

 

தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது இந்திய மக்களுக்கே தெரியும். அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அந்த ஆணையங்கள் பல் இல்லாத ஆணையங்களாகவே உள்ளன” என்றார்.