தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி சீரழித்துவிட்டதாக பக்தர் ஒருவர் அருள்வந்து கூறியதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் உள்ளார்.

edappadi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்றிருந்தார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. அதையடுத்து, ஆந்திர போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு கடவுள் வழிபாட்டிற்காக சென்றார்.

அங்கு அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டு, சாமி சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கூட்டத்தில் இருந்து பக்தர் ஒருவர் ‘ஏய் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டையே சீரழிச்சிட்டியேடா’ என அருள் வந்து சத்தமிடத் தொடங்கினார். தொடர்ந்து அவர், ‘எடப்பாடியை என்கிட்ட வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு.... தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியேடா... என்கிட்ட வரச் சொல்லு... ஒருமுறை அவனை..’ என கத்திக்கூச்சலிட சூழலை உணர்ந்த காவலர்கள் அந்த பக்தரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரித்ததில் அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பக்தர் ஸ்ரீராமுலு என்பது தெரியவந்தது. அவரைக் கடுமையாக கண்டித்த காவலர்கள் மீண்டும் உள்ளே நுழையாத வண்ணம் பார்த்துக்கொண்டனர். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘பகவான் எடப்பாடி பழனிசாமிக்கு அருள் வழங்கவே வந்துபோனார்’ எனக் கூறினார்.

Advertisment

ஏற்கெனவே, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் வேளையில், பக்தர் ஒருவரின் இந்தக் குற்றச்சாட்டு அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.