அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ. மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
கடும் நிதி நெருக்கடியில் கூட தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியைக் கூட தர மறுக்கிறது. எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தா, மக்கள் வாங்கும் நிவாரணத் தொகையை பிச்சைனு சொல்வீங்க. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அவர்களது உரிமை. உங்களது அரசியலுக்காக மக்களை இழிவுபடுத்துவீர்களா?. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லையென்றால் ஏன் நிதியமைச்சர் பதவி வகிக்க வேண்டும். தமிழக ஆளுநரை வைத்து மாநில அரசை மிரட்டி பார்க்கின்றனர். தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. பொன்முடியின் பதவியேற்பு மூலம் ஆளுநர் மாளிகையில் இருந்து தேர்தல் பயணம் தொடங்கியுள்ளது. ஆளுநரிடம் ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்துட்டு, ‘இங்கிருந்து பிரசாரம் தொடங்குகிறது’ என சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு அவரு, ‘பெஸ்ட் ஆப் தி லக்’னு சொல்லி அனுப்புனார். ராஜ் பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை போகும்.
பா.ஜ.க. செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடுகிறார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவை ஏன் இபிஎஸ் அழுத்தமாக எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள கள்ளக் கூட்டணி விரைவில் வெளியே வரும்” எனத் தெரிவித்தார்.