Skip to main content

தொடங்கியது தேர்தல் பரப்புரை; மத்திய அரசை வெளுத்து வாங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Chief Minister M.K. Stalin Election campaign started

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ. மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

Chief Minister M.K. Stalin Election campaign started

இந்த பொதுக் கூட்டத்தில் முதலவ்ர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திருச்சி என்றாலே தி.மு.க.தான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தி.மு.க.வினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தல் என்பதாலே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தாலே பிரதமர் தமிழகம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் கண்களிலும் முகத்திலும் தெரிகிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசின் ஊழல்கள் வெளியே வரும்.

கடும் நிதி நெருக்கடியில் கூட தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியைக் கூட தர மறுக்கிறது. எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தா, மக்கள் வாங்கும் நிவாரணத் தொகையை பிச்சைனு சொல்வீங்க. மக்களுக்கு கொடுப்பது பிச்சை அல்ல. அவர்களது உரிமை. உங்களது அரசியலுக்காக மக்களை இழிவுபடுத்துவீர்களா?. மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியவில்லையென்றால் ஏன் நிதியமைச்சர் பதவி வகிக்க வேண்டும். தமிழக ஆளுநரை வைத்து மாநில அரசை மிரட்டி பார்க்கின்றனர். தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. பொன்முடியின் பதவியேற்பு மூலம் ஆளுநர் மாளிகையில் இருந்து தேர்தல் பயணம் தொடங்கியுள்ளது. ஆளுநரிடம் ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்துட்டு, ‘இங்கிருந்து பிரசாரம் தொடங்குகிறது’ என சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு அவரு, ‘பெஸ்ட் ஆப் தி லக்’னு சொல்லி அனுப்புனார். ராஜ் பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை போகும்.

பா.ஜ.க. செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகங்களை செய்து விட்டு தற்போது கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடுகிறார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவை ஏன் இபிஎஸ் அழுத்தமாக எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள கள்ளக் கூட்டணி விரைவில் வெளியே வரும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.