Skip to main content

ரூ.13 ஆயிரத்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
M. K. Stalin

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13 ஆயிரத்திற்கு பதில், ரூ.5.44 லட்சம் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது - பல ஏழை மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்; சமூகநீதியும், ஏழை - எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற, அதனை 8 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும்,  ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி- ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்வி பெறுவதில் பேரின்னலை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அரசுக்  கல்லூரி அடிப்படையில் கவுன்சிலிங்!; கட்டண வசூல் தனியார் கல்லூரி மாதிரி; என்பது கொடுமையாக இருக்கிறது. ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம் ரூபாய் கட்டணம் என்று கடந்த 12.11.2020 அன்று அரசு திடீரென்று அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தக் கட்டணத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட - அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக் குறிப்பேட்டில் கல்விக்கட்டணம் ரூ. 4 லட்சம் என்று தெரிவித்து விட்டு - இப்போது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் 5.44 லட்சம் ரூபாய் என்று மீண்டும் கட்டணத்தைக் கருணையற்ற முறையில் உயர்த்தியுள்ளது அ.தி.மு.க. அரசு . மாணவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி - இடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களின் கல்விக் கனவை  “அதிகக் கட்டணம்” என்ற பெயரில் பறிப்பதாகவே அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் 3.85 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளும் அரசு நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளா அல்லது அரசு கல்லூரிகளா என்ற சந்தேகமும் கவலையும் எல்லா மாணவர்களுக்கும் எழுகிறது. ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13,670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11,610 ரூபாய். இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியிலும் வசூலிப்பதுதான் நியாயம். அதுதான் பொறுப்புள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால் அவை இரண்டு கல்லூரிகளையும் அரசுக் கல்லூரிகள் என்று அறிவித்து விட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்? இந்தத் துயரம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்!


இதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது - பல மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்.  இந்த வருமான வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால்தான் சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும்.

 

மருத்துவக் கல்லூரிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த 30.11.2020 என்ற இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர் மேற்கண்ட இரு கல்லூரிகளிலும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த அதிகக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து  எழுந்து கொண்டே இருந்தாலும் - அ.தி.மு.க. அரசு மயான அமைதி காக்கிறது. இது மாணவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தை  ரூ.13670 (மருத்துவக் கல்வி) என்றும், ரூ.11610 (பல் மருத்துவக் கல்வி) என்றும் உடனடியாகக் குறைத்து அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித் தொகை பெறும் வருமான வரம்பினை ரூ. 2 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது கட்டணம் செலுத்த முடியாத ஏழை - எளிய நடுத்தர மாணவர்களின் கண்ணீர்க் கோரிக்கை!  


“அரசுப் பள்ளியில் படித்ததால் அவர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும்” என்று பத்திரிகையாளர்களிடம்  கோபப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி,  இந்தக் கல்விக் கட்டணத்தைக் குறைத்து – அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். செய்வாரா முதலமைச்சர்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.