Skip to main content

திருநங்கைகள் சுயதொழில் செய்ய பத்து லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சென்னை காவல்துறை (படங்கள்)

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

 

சென்னையில் வாழும் திருநங்கைகள் வாழ்வாதாரத்தில் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழில் செய்து சமூகத்தில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும் சூளைமேடு F5 காவல்நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாவலர் ஆனந்த்பாபு மற்றும் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் இராமகிருஷ்ணன், மாரீஸ்வரன், திலகவதி, தீபா, குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரசித்தீபா மற்றும் நிலைய காவலர்கள் ஆகியோர் ஏற்பாட்டில் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள சுயதொழில் செய்வதற்கான பொருட்கள், 150 திருநங்கைகளுக்கு வழங்கும் விழா எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

 

திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் (பொறுப்பு) சாமிநாதன், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் (பொறுப்பு) சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

 

அவர் பேசும்போது, "சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகள் பெயரை சொன்னாலே அவலமாக பார்க்கும் ஒரு பார்வை இருந்தது, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் காவல்துறை பாடுபட்டு வருகிறது. சென்னை காவல்துறைக்கும், திருநங்கைகளுக்கும் எப்போதும் ஒரு இணக்கமான நட்புறவு இருந்து வருகிறது. வெளியே தெரியாமல் நிறைய உதவிகளை திருநங்கைகளுக்கு நாங்கள் செய்து வருகிறோம். சமூகத்தில் அவர்கள் மீதான அவலமான பார்வை மாற வேண்டும் என்பதே நோக்கம். அதை நோக்கி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தாயாராக இருக்கிறோம். நீங்கள் எப்போது எந்த தேவையாக இருந்தாலும் தயங்காமல் எங்களிடம் கேட்கலாம்" என்றார் உறுதியாக.

 

சென்னையில் பாதிக்கப்பட்ட திருநங்கைகளை அரவணைத்து உதவி புரிந்து சமூக சேவையாற்றி வரும் திருநங்கைகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெற்ற திருநங்கைகள், தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தாங்கள் சமுதாயத்தில் கௌவுரமாக வாழவும் உதவி செய்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது! 

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Postal voting for police officers has begun

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தபால் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று (11.04.2024) முதல் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு மையங்களில் தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.