
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற் கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது.
இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, சித்தராமையா மாநில முதல்வராகவும் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
சித்தராமையா முதல்வராக சராசரியாக 2 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த முதல்வர் பதவிக்கான விவாதம் கர்நாடகா காங்கிரஸுக்குள் எழுந்துள்ளது. தலைமை பதவி தொடர்பாக டி.கே.சிவக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கருத்து ஒன்றை நேற்று (23-06-25) தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இக்பால் உசேன், “டி.கே.சிவக்குமார் 200% நிச்சயமாக முதல்வராக வருவார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களுக்கு மேல் பெற்று சிவக்குமார் தலைமையில் அரசாங்கம் அமையும். இது கடவுள் மகாதேவப்பா மீது சத்தியம்” என்று கூறினார். இவரது பேச்சு கர்நாடகா காங்கிரஸுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.சி நாகராஜ் யாதவ், “அடுத்த முறை என்று சொல்வது என்ன அர்த்தம்?. சித்தராமையா தற்போது முதல்வராக இருக்கிறார். கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. டி.கே.சிவக்குமார் நிறைய பங்களித்துள்ளார். அது போல் சித்தராமையாவும். அடுத்த முதல்வர் என்று கட்சித் தலைமை மட்டுமே முடிவு செய்யும். வகுப்புவாத சக்திகளை தோற்கடித்து 2028இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.
அடுத்த முதல்வர் தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களுக்கு மத்தியில், டி.கே.சிவக்குமாரை இரண்டாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் ஆதரித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவராஜ் சிவகங்காவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பசவராஜ் சிவகங்கா, “விதி என்ன எழுதியிருக்கிறது யாருக்கும் தெரியாது. இந்த விவகாரம் குறித்து டிசம்பர் மாதத்திற்கு நாம் பேசலாம். எங்கள் தலைவர் (டி.கே.சிவக்குமார்) முதல்வர் ஆனால் நான் முதலமைச்சராவது போலத்தான். இது குறித்து டிசம்பர் மாதத்திற்கு விவாதிப்போம்” என்று கூறினார். இந்த ஆண்டு இறுதியில் அதிகார மாற்றம் ஏற்படக்கூடும் என்று சூசகமாகக் கூறியதாகக் கருதப்படுகிறது.