Skip to main content

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
tk


    கீரமங்கலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய 25 பேர் உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 105 பேர்கள் மீது ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடிய போது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் தொடர்ந்து 99 நாட்கள் போராடிய நிலையில் 100 வது நாள் போராட்டத்தின் போது பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலவலகம் நோக்கி சென்ற போது போலிசார் தடுத்ததால் ஏற்பட்ட கலவரத்தில் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போராளிகளுக்கு கீரமங்கலத்தில் நாம்தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் உயிரிழந்தவர்களின் படங்கள் அடங்கிய பதாகைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி கலைந்து சென்றனர். அதில் துரைப்பாண்டியன் உள்பட 25 பேர்கள் மீதும் கொத்தமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலை முதலாளி ஆகியோர் உருவ பொம்மை எரித்ததாக விவசாய சங்கம் துரைராசு தலைமையில் 30 பேர்கள் மீதும் ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போடிய போது பதிவு செய்யப்பட்ட அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரிவுகளில் கீரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

    அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 12 பேர், கோட்டைப்பட்டிணத்தில் 5, பேர், கந்தர்வகோட்டையில் 8 பேர், பொன்னமராவதியில் 25 பேர், கீரமங்கலம் 55 பேர் என மொத்தம் 105 பேர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இது குறித்து நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் எதிர்ப்பு போராட்டகுழுவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் கூறும் போது.. நெடுவாசலில் எப்படி ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் வேண்டாம் என்று போராடினோமோ அதே பொல தான் தூத்துக்குடி மக்களும் போராடினார்கள். அவர்களை இப்படி சுட்டுக் கொன்றதற்கு நீதி வேண்டும் என்றும் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றிஅ ஞ்சலி செலுத்துவதும் எப்படி பொதுமக்களுக்க இடையூறாக இருக்க முடியும். அதற்காக வழக்கு போடுவது போராட்டக்காரர்களை மிரட்டுவது போல உள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட ஒன்று சேரக் கூடாது என்று தடுக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

 

    இப்படித் தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட நிர்வாகம் யார் மீதும் வழக்கு போடமாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்போது 62 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அதே பிரிவுகளில் இப்போது அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.