Skip to main content

தொடரும் தோல்விகள்..! எங்கே போனது மோடி அலை?

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

இடைத்தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில், பா.ஜ.க.வின் இந்தப் பின்னடைவு 2014ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட மோடி அலை எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 

Modi

 

மோடி பிரதமராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்தடுத்த தோல்விகளின் மூலம் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை வெறும் 273 மட்டுமே. இந்நிலையில், இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும் அவற்றில் பா.ஜ.க.வின் நிலை குறித்து பார்க்கலாம். 
 

2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 27 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் பா.ஜ.க. தான் போட்டியிட்ட 24 தொகுதிகளில், வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தன் கைவசம் இருந்த 13 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழந்திருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட இதுவரை கைப்பற்ற முடியவில்லை. 
 

Modi

 

மேலும், பா.ஜ.க.வுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளையே தந்திருக்கிறது. அதாவது, இதுவரை பா.ஜ.க. தான் இழந்த 8 தொகுதிகளில் கோரக்பூர், புல்பூர், அஜ்மீர், ஆல்வார், கைரானா மற்றும் பந்த்ரா கோண்டியா ஆகியவற்றை இழந்தது இந்த ஆண்டில்தான். ஆனால், காங்கிரஸோ பா.ஜ.க.விடம் இருந்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன. 
 

ஆந்திராவில் கூட்டணிப் பிளவு, கர்நாடகாவில் தோல்வி என தென்னிந்திய நம்பிக்கை தகர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாநிலங்களிலும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறது பா.ஜ.க. இடைத்தேர்தல் தோல்வி என்பது பா.ஜ.க.வின் வியூகம் என்று சொல்வீர்களானால், பெரும்பான்மை இழப்பின் மூலம் சொந்த பிம்பம் நொறுக்கப்படுவதை அது விரும்புமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்தானே. இன்னும் ஒரே ஆண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பா.ஜ.க.வை எதிர்க்கின்றன. இப்போதே மோடி அலை தொலைந்துவிட்டதா? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு அதற்கான விடை கிடைத்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.