அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரிஜேந்திர சிங் ஆவார். இவர் இன்று (10.03.2024) பா.ஜ.க.வில் இருந்து விலகினர். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.
இது குறித்து பிரிஜேந்திர சிங் கூறுகையில், “அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகினேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிவிட்டேன்” எனத் தெரிவித்தார். பா.ஜ.க. எம்.பி ஒருவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.