Skip to main content

போர் தொடுப்பது அவ்வளவு எளிதா? 

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

 

ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் என்று மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். இதெல்லாம் மக்களுடைய ஆத்திரத்தை உசுப்பேத்தவும், அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றவும் மட்டுமே உதவும். நிஜத்தில் 2017 ஆம் ஆண்டு எல்லையோரத்தில் இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைத்த கொடூரத்துக்கே மோடி அரசு பதிலடி கொடுக்கவில்லை.

 

மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் எப்போதுமில்லாத வெற்றியை 2014ல் பாஜகவுக்கு கொடுத்தார்கள். அங்கு கூட்டணி அரசு அமைத்தது பாஜக. அதன்பிறகு என்ன நடந்தது? அப்புறம்தான் காஷ்மீர் படுமோசமான வன்முறைக் களமாக மாறியிருக்கிறது.

 

ay

 

இஸ்லாமிய இளைஞர்களை பாரபட்சமின்றி காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய் தீவிரவாத முத்திரை குத்தும் முயற்சி தீவிரமடைந்தது. இதை கண்டித்த போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் மீது பெல்லட் குண்டுத் தாக்குதலை தொடுத்து சிறு குழந்தைகள்கூட பாதிக்கப்பட்டனர்.

 

அதைத்தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மீது கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளுமே தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்தது. பாஜகவின் நோக்கம் காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையை வளர்த்து, அவர்களை இந்தியாவோடு இணக்கமாக வைத்திருப்பது அல்ல என்றே மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள்.

 

மிகக்குறிப்பாக, பாகிஸ்தான் வசம் இருக்கிற காஷ்மீர் பகுதிக்கு, இங்கிருக்கிற முஸ்லிம்களை அனுப்புவதே பாஜகவின் நோக்கம் என்று வெளிப்படையாகவே மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் இருந்து முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விரட்டிவிட்டு, அவர்களுடைய சொத்து சுகங்களை காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு கொடுப்பதே பாஜகவின் இலக்கு என்று கருதும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினர் மற்றும் பாஜகவினரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

 

மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகுதான் காஷ்மீரில் மிகக்குறைவான வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவில் எல்லையோர உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளன. மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த நாலேமுக்கால் ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அப்போதெல்லாம் மோடி இப்படி ஆவேசமாக பேசியதில்லை. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால், ஆட்சி முடியப்போகிற நிலையில் வழக்கத்திற்கு மாறான இந்திய வீரர்களின் அணிவகுப்பை எல்லைப் பகுதியில் நடத்தி, 42 வீரர்களின் இன்னுயிரை பறித்திருக்கிறது மத்திய அரசு.

 

பயங்கரவாத தாக்குதலில் பலியான சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை ஒரே சமயத்தில் 70 வாகனங்களில் அணிவகுக்கச் செய்தது ஏன் என்று வினா எழுப்பியிருக்கிறார். இதுவரை இப்படி அணிவகுக்கச் செய்தது இல்லை என்றும் இதில் சதி இருப்பதாகவும் அவர் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

 

அதைக்காட்டிலும் பாதுகாப்பு செயற்கைக் கோள்கள் இத்தனை இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார். தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, உளவுத்துறை சார்பில் மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. வெடிமருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ay

 

தாக்குதல் நடத்தப்போவதை சம்பந்தப்பட்ட ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பும் சூசகமாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகு இப்படி ஒரு மோசமான தாக்குதலை அனுமதித்தது யார் என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழும் என்பதை மோடி திசை திருப்பப்பார்க்கிறார்.

 

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கிளப்பி விடுகிறார்கள். அவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உலக அளவில் போர்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களுடைய நோக்கம், வெற்று வெறியை உருவாக்கி தேர்தலில் அதை பயன்படுத்துவதே. உண்மையில் போர் தொடுத்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதையெல்லாம் மறந்து பேசுகிறவர்களின் அறியாமையை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.

 

இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை அதிக அளவில் வைத்திருக்கின்றன. இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் அதிகமாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய நாடுகளும் அதிகம் என்ற நடைமுறை உண்மைகளையெல்லாம் அறியாமல் பேசுகிறார்களா? அறிந்தாலும் இப்போதைக்கு மோடி அரசின் தோல்வியை மடைமாற்றும் நோக்கத்தில் வெறியேற்றி பேசுகிறார்களா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

 

பாகிஸ்தானுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மட்டுமே வெறுப்புணர்வை வளர்த்து, அந்த வெறுப்புணர்வையே தனக்கு வாக்குகளாக மாற்றுவதுதான் பாஜகவின் ஒரே தந்திரம். பாஜகவைத் தவிர இந்தியர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானை சகோதர நாடாக பாவித்து, ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். பூமியின் சொர்க்கம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் மீண்டும் பெறவேண்டும் என்பதே பெரும்பான்மை இந்தியரின் விருப்பம். பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொண்டு, இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுத்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படைத் தன்மையை காப்போம் என்று சூளுரைப்பதே இந்தியர்களின் கடமை.

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.