Skip to main content

பாஜக, காங்கிரஸுக்கு டாடா சொன்ன டெல்லி... மீண்டும் கெத்து காட்டிய கெஜ்ரிவால்...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020


 

வளர்ச்சியின் நாயகன் என்றும் அசைக்க முடியாத பிரதமர் என்றும் தினமும் பாஜகவினர் கூறிவந்த நிலையில், 6 ஆண்டுகள் ஆட்சிசெய்த இந்தியாவின் தலைநகரத்து மக்கள் பாஜகவை பொடிப்பொடியாக சிதைத்திருக்கிறார்கள். அத்துடன் அற்புதங்களை நிகழ்த்துபவராக அடிக்கடி வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவையும் நோகடித்திருக்கிறார்கள்.

 

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி பலத்த அடிவாங்கியிருக்கிறது. இனி தமிழ்நாட்டைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் எழுந்திருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது.

 

modi-aravind-rahul



மூன்றாவது முறையாக முதல்வராகப் போகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். 2013 ஆம் ஆண்டு முதன்முதல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போட்டியிட்டது. தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிரான வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக நினைத்திருந்தது. ஆனால், டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு 28 இடங்களையும் பாஜகவுக்கு 31 இடங்களையும், காங்கிரஸுக்கு 8 எட்டு இடங்களையும், மற்றவர்களுக்கு 3 இடங்களையும் கொடுத்தார்கள்.

 

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டி அரசாங்கத்தை அமைத்தார் கெஜ்ரிவால். ஆனால், லோக்பால் மசோதாவை அவையில் தாக்கல் செய்தபோது பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக எதிர்த்தன. அம்பானிக்கு எதிராக கெஜ்ரிவால் செயல்படுவதை தடுக்க இரண்டு கட்சிகளுமே பேரவையில் தடங்கலை ஏற்படுத்தின.

 

எனவே, 2013 டிசம்பரில் முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால், 2014 பிப்ரவரி 14 ஆம் தேதி தனது அரசை கலைக்கும்படி ஆளுநரிடம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ஒரு ஆண்டுவரை டெல்லியில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.

 

அதன்பிறகு 2015 ஜனவரியில் டெல்லி பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஆம் ஆத்மி 70க்கு 67 இடங்களை கைப்பற்றியது. பாஜக வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸுக்கு 1 இடம்கூட கிடைக்கவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 1 ஆண்டில் தலைநகர் டெல்லியில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது.

 



அந்த வெற்றிக்கு ஆம் ஆத்மி அறிவித்திருந்த வாக்குறுதிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. காங்கிரஸுக்கு மாற்றாக மதசார்பற்ற அரசு ஒன்றை மக்கள் விரும்பினார்கள். மாற்று கட்சி கிடைத்தவுடன் அதற்கு அவர்கள் வாக்களித்தார்கள் என்றும் கூறினார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த டெல்லியில், பாஜக வந்துவிடக்கூடாது என்று இஸ்லாமியர்களும், காங்கிரஸாரும் இணைந்து ஆம் ஆத்மிக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. கிட்டத்தட்ட ஸ்வீப் என்ற அளவுக்கு பெரும்பான்மை பெற்ற கெஜ்ரிவால் 1914 பிப்ரவரி 14 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார்.

 

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும், ஆம் ஆத்மி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியது. ஆட்டோ டிரைவர்களுக்கு சலுகை காட்டியது. மருத்துவமனைகளையும் அரசுப் பள்ளிகளையும் சீரமைத்தது. முதியோருக்கும் பெண்களுக்கும் உயர்ரக மருந்துகளுடன் சுகாதார வசதியை வீ்ட்டுக்கே கொண்டு சென்று இலவசமாக அளித்தது. குறிப்பாக மின்சார கட்டணத்தை வெகுவாக குறைத்தது.

 

டெல்லி அரசின் செயல்பாடுகளை தடுக்க பாஜக பல்வேறு தடைகளை போட்டது. டெல்லி போலீஸ் அதிகாரத்தை மாநில அரசுக்கு கொடுக்க மறுத்தது. எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் துணை நிலை ஆளுநரைக் கொண்டு தடைபோட்டது.

 



அப்படி இருந்தும் இந்தத் தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அலை வீசுவதாக கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. அதையடுத்து, பாஜகவின் மத்திய அமைச்சர்கள் 70 பேரும், 270 எம்.பி.க்களும் முக்கிய தலைவர்களும், பாஜகவின் 7 மாநில முதல்வர்களும், 40 நட்சத்திர பிரச்சாரகர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு முந்தின நாட்களில் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் 375 எம்.பி.க்கள் பண மூட்டைகளுடன் கேம்ப் அடித்தார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா 48 பொதுக்கூட்டங்களை நடத்தினார். பேரணிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி 10 பேரணி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். மொத்தத்தில் ஒரு மாநகராட்சி அளவுக்கான டெல்லியில் பாஜக சார்பில் 5 ஆயிரம் பிரச்சார பேரணிகள் நடத்தப்பட்டன.

 

இதைத்தவிர, தனக்கு சாதகமான தேர்தல் ஆணையத்தை பாஜக உதவிக்கு வைத்திருந்தது. தனது எடுபிடியாக உள்ள சிபிஐயைக் கொண்டு, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் ரெய்டுகளை நடத்த பாஜக உத்தரவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரியாணியும் மதுவும் தாராளமாக வழங்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் மீறி, ஆம் ஆத்மி கடந்த முறைபெற்ற வெற்றிக்கு நிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியும்கூட பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணம் தனது மக்கள்விரோத மதவாத செயல்திட்டம்தான் என்பதை உணர்ந்து பாஜக திருந்துமா? மாறாக, இருக்கும் காலத்திற்குள் இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு பின்னே தள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.