இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆசிரமங்கள், பணபலம், அரசியல் செல்வாக்கு என எல்லாமும் கொண்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு. ஜோத்பூரில் உள்ள இவரது ஆசிரமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் படிப்பதற்காக சேர்த்துவிட்டனர். அங்கு படித்துக்கொண்டிருந்த சிறுமிக்கு தீய சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளது, பேய் ஓட்டவேண்டும் எனக்கூறி பூஜை நடத்திய அசராம் பாபு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் 9 பேர் வழக்கு நடந்த சமயத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். மூன்றுபேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டு, அதை மறுத்த நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்திருக்கிறார். இத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், சிறுமி தொடர்ந்து விசாரணையில் கலந்துகொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம் என்பதால் ஹரியானா, குஜராத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.