அமெரிக்காவில் செயல்படும் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ என்ற நிறுவனம், மனித விண்வெளி பயணச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘ஆக்சியம்-4’ பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தனியார் விண்கலத்தை அனுப்பிய நிலையில், இஸ்ரோவும் நாசாவும் இணைந்து ‘ஆக்ஸியம் 4’ என்ற பெயரில் 4வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, போலந்து, இந்தியா மற்றும் ஹங்கேரி ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த தலா 1 பேர் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவின் சார்பில், இந்திய விமானப்படையின் கேப்டன் சுபான்ஷு சுக்லா என்பவர் பயணிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த மாதம் நான்கு முறை உட்பட மொத்தம் இதுவரை ஆறு முறை ‘ஆக்சியம்-4’ திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இறுதி கட்டமாக இந்திய நேரப்படி நேற்று (25-06-25) மதியம் இந்த விண்கலம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகமே உற்று நோக்கும் ‘ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் இயக்கப்படும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் ஏவப்பட்டது. விண்வெளிக்கு சென்றுள்ள இவர்கள் இன்று (26-06-25) மாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தை நெருங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தோடு இவர்களுடைய விண்கலம் டாக்கிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி இந்தியரான சுபான்ஷு சுக்லா, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டில் ராகேஷ் ஷர்மா என்ற இந்தியர் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு, இந்தியர் ஒருவர் விண்வெளிக்குச் சென்றிருப்பது இந்தியாவிற்கு பெருமையைத் தேடி தந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 1986ஆம் ஆண்டில் பிறந்த சுபான்ஷு சுக்லா, கடந்த ஜூன் 2006ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையின் போர் விமானப் பிரிவில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டம் பெற்ற இவர், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாவும், பயிற்சி பெற்ற போர் விமானியாகவும் இருந்துள்ளார்.

Advertisment

ஒரு போர் தலைவராகவும், அனுபவம் வாய்ந்த சோதனை விமானியாகவும் இருந்த சுபான்ஷு சுக்லா, எஸ்யு-30, எம்கேஐ, எம்ஐஜி-21, எம்ஐஜி-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர் மற்றும் ஏஎந்31 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டு, 2,000 மணி நேர அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் விண்வெளி வீரர் பயிற்சி பெற்ற சுபான்ஷு சுக்லா, சுற்றுப்பாதை இயக்கவியல், நுண் ஈர்ப்பு விசையில் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார். இது போன்று பல்வேறு திறமைகள் கொண்ட சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு இந்தியராக முதல்முறையாகப் பயணிக்கிறார். 2027ஆம் ஆண்டு ஏவப்படும் என எதிர்பார்க்கப்படும் இஸ்ரோவின் கனவு திட்டமான சுகன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் சுபான்ஷு சுக்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.