AMMK treasurer Vetrivel

We will swim together or We will sink together இதுதான் வெற்றிவேல் அடிக்கடி சொல்லும் வார்த்தை. தினகரனுடன் சேர்ந்து தனி அணியாக செயல்பட்டபோது எடப்பாடி பழனிசாமி, வெற்றிவேலை அழைத்தார். அந்த அழைப்புக்கு வெற்றிவேல் சொன்ன பதில்தான் இந்த வார்த்தைகள்.

Advertisment

நீந்தினால் ஒன்றாக நீந்துவோம். மூழ்கினால் ஒன்றாக மூழ்குவோம் என சொன்ன வெற்றிவேல் தினகரனுக்கு பழக்கமானது ஜெயலலிதா த.மா.கா. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் ரகசியமான விஷயங்களை பேச தினகரனை மூப்பனாரிடம் அனுப்புவார். அப்பொழுது மூப்பனாரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த வெற்றிவேல், தினகரனுக்கும் சசிகலாவுக்கும் பழக்கமானார். அந்தப் பழக்கம் அவரை அதிமுகவுக்கு கொண்டு வந்தது. கடைசி வரை சசிகலா ஆதரவாளராக நிலைக்க வைத்தது.

Advertisment

ammk

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெற்றிவேல் வெளியிட்டார். அப்பொழுது இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வெற்றிவேலை கண்டப்படி திட்டினார். நான் சின்னம்மா மீது அம்மாவை கொன்றார்கள் என்ற கொலைப்பழியை துடைக்கத்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் என சொன்ன வெற்றிவேலிடம் அதுபோல ஒன்பது வீடியோக்கள் இருந்தது. சசிகலா கேட்டுக்கொண்டதற்காக அவற்றை வெற்றிவேல் சாகும்வரை வெளியிடவே இல்லை.

சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்வதற்கு முன்பு அப்பு என்கிற ரவுடியை கைது செய்ய முயன்றார். அப்பு வெற்றிவேலின் நண்பர். ஜெ. காவல்துறை மூலம் வெற்றிவேலின் உதவியை நாடினார். ஜெ. சொன்னதற்காக நண்பர் என்றும் பாராமல் அப்புவின் செம்மரக்கட்டை குடோன்களை வெற்றிவேல் உடைத்தார். குடோன் உடைப்பட்டதும் பயந்துபோன அப்பு, காவல்துறையில் சரண் அடைந்தார்.

Advertisment

இப்படி விஸ்வாசத்துடன் உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசாமல் வெளிப்படையாக உண்மையை பேசி வாழ்ந்த வித்தியாசமான அரசியல்வாதி வெற்றிவேல். இவர் அமைச்சர் ஜெயக்குமாரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். அப்பொழுதுகூட ஜெயக்குமாரை மோசமான வார்த்தைகளில் அவர் வர்ணிக்கவில்லை.

நான் மூப்பனாரின் வளர்ப்பு, நம்பிக்கை, நாணயம் இதுதான் என் சொத்து என சொன்ன வெற்றிவேலை தனது மனசாட்சி என டிடிவி தினகரன் வர்ணிப்பார். தினகரனைவிட சசிகலாவுக்கு அதிக விஸ்வாசத்தை காட்டியவர் வெற்றிவேல். சசிகலா வெளியே வருவதை காணாமல் மறைந்துவிட்டார் என்கிறார்கள் அமமுகவினர்.