Skip to main content

ரஜினியை பாதித்த மரணம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

vetrivel ammk - rajinikanth actor - Karate R. Thiagarajan Congress

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் பொருளாளரும், டி.டி.வி தினகரனின் தளபதியாகவும் இருந்த வெற்றிவேலின் மரணம் அ.ம.மு.க.வை மட்டுமல்ல அதிமுகவையும் அதிர வைத்துவிட்டது. அந்தளவுக்கு இரண்டு கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தவர் வெற்றிவேல். 
           

வெற்றிவேலின் மறைவையறிந்து தனியார் மருத்துவமனைக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் வெற்றிவேலின் நீண்டகால நண்பரான கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட வெற்றிவேலின் உடலை கண்டு கதறினார் கராத்தே தியாகராஜன். கராத்தேவை தவிர வெற்றிவேலின் உடலுக்கு மரியாதை செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை மருத்துவமனை நிர்வாகம். 
      

அவரது மரணத்தை ரஜினிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் கராத்தே தியாகராஜன். கடந்த காலங்களில் பல முறையும், சமீபகாலங்களில் இரண்டு முறையும் ரஜினியை சந்தித்துள்ள வெற்றிவேல், ரஜினியின் நட்பை பொக்கிஷமாக பாதுகாத்தவர். அதனாலேயே, வெற்றிவேலின் மறைவு ரஜினியைப் பாதித்துள்ளது. வெற்றியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்திருக்கிறார் ரஜினி.

 

கடந்த காலங்களில் (1996) தி.மு.க - த.மா.கா கூட்டணி உறவு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும். இவர்கள்தான், அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த ரஜினியை அடிக்கடி சந்தித்து அரசியல் ரீதியான பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரஜினியிடம் சில விசயங்களைப் பேசுவதற்கு கராத்தே தியாகராஜனையும் வெற்றிவேலையும் தான் அனுப்பி வைப்பார் மறைந்த தலைவர் மூப்பனார். அந்தளவுக்கு, இவர்கள் இருவரும் மூப்பனாரின் தளபதிகளாக இருந்தவர்கள்.

 

அந்த வகையில் வெற்றிவேலின் மரணம் ரஜினியை வெகுவாகப் பாதித்தது. வெற்றிவேலின் மகன் பரத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்தியுள்ளார் ரஜினி!


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.