Skip to main content

விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே 'ஆவின்' பால் கெட்டுப் போகிறது: சு.ஆ.பொன்னுசாமி!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

aavin milk


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கரானா நோய்த் தொற்று காரணமாக மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராத காரணத்தால் அங்கே பால் உற்பத்தி தடைபட்டு மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பால் மட்டுமே அங்கே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 

இதன் காரணமாக மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பாலானது சேலம், கோவை, மதுரை, விழுப்புரம், வேலூர் மாவட்ட பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 

தற்போது கோடைகாலம் என்பதாலும், தொலைதூர மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பே உற்பத்தி செய்து, முறையான குளிர்நிலை பராமரிக்காமல் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படுவதாலும் விநியோகம் செய்த சில மணி நேரங்களிலேயே ஆவின் பால் கெட்டுப் போகிறது.
 

PONNUSAMY

 

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆவின் பால் கெட்டுப் போகும் சூழல் நிலவிய போது தற்போது பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (12.05.2020) விநியோகம் செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியான ஆவின் (ஆரஞ்சு கலர்) கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பால், சேலம் மாவட்டத்தில் உற்பத்தியான ஆவின் (பச்சை) நிலைப்படுத்தப்பட்ட பால் காலையிலேயே கெட்டுப் போவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. 
 

இதனால் ஆவின் நிர்வாகத்தின் தவறு காரணமாக கெட்டுப் போன ஆவின் பாலினை வேறு வழியின்றி மாற்றித் தர வேண்டிய கட்டாயத்திற்குப் பால் முகவர்கள் தள்ளப்படுவதால் நாங்கள் எங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகிறது.
 

கடந்த ஒரு வார காலமாகவே இதே நிலை நீடித்து வருவதால் கெட்டுப் போகும் பாலிற்குப் பதிலாக புதிய பாலினை மாற்றித் தர வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தப் பால் முகவர்களுக்கும் பால் மாற்றித் தரப்படவில்லை.
 

எனவே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் நிலைமை சீரடைந்து முழுமையான உற்பத்தி தொடங்கும் வரை பொது வணிகத்திற்கான பால் விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்படும் பாலினை தரமான குளிர் நிலையில் பராமரித்துச் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம் செய்ய வேண்டும், கெட்டுப் போகும் பாலிற்குப் பதிலாக புதிய பாலினை உடனடியாக மாற்றித் தர உத்தரவிட வேண்டும் என ஆவின் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
 

ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பால் முகவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்குமானால் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் பால் முகவர்கள் அனைவரும் ஆவின் பால் விற்பனையை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையிலான மாற்று முன்னேற்பாடுகளையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.