Skip to main content

ஆந்திராவில் கைதான 84 தமிழர்கள் தமிழகம் திரும்பினர்

Published on 03/03/2018 | Edited on 03/03/2018
anthira thamilars

 

தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்துக்கு வருபவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வருபவர்களே என சந்தேக கண்கொண்டு நோக்குகிறது ஆந்திரா காவல்துறை. அந்த சந்தேகம் பிரபலமான திருப்பதி – திருமலை வெங்கடாஜலபதியை வணங்க போகிறவர்களையும், கூலி வேலைக்கு வருபவர்களை பிடித்து அடித்து உதைத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறது. உண்மையில் செம்மரம் வெட்டவந்து சிக்கியவர்கள், அப்பாவிகள் என சுமார் 4 ஆயிரம் தமிழக கூலி மக்கள் ஆந்திராவின் திருப்பதி, சித்தூர், கடப்பா, அனந்தபூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 


இந்நிலையில் கடந்த மார்ச் 2ந்தேதி, திருப்பதியில் இருந்து கடப்பா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தார் பாய் போர்த்திக்கொண்டு ஒரு லாரி சென்றுக்கொண்டிருந்தது. அதனை ஆஞ்சநேயா சோதனை சாவடி அருகே நிறுத்திய காவல்துறை ஆய்வாளர் சந்து தலைமையிலான கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட போலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 84 கூலி தொழிலாளர்கள் தார் பாய்க்கு கீழே இருந்தனர். அவர்களை பிடித்த கடப்பா காவல்துறை, இவர்கள் செம்மரம் வெட்டவந்தவர்கள் எனச்சொல்லி கைது செய்தது. விசாரணையில் அதில் 50 பேர் வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள், 34 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள். அதில் இருவர் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இவர்களை திரட்டி அனுப்பியது ஜம்னாமத்தூரை சேர்ந்த ஜெயராமன், அண்ணாதுரை என வாக்குமூலம் தந்துள்ளனர்.

 


இந்த கைதுக்கு வடதமிழகத்தில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட சில கட்சிகள் ஆந்திரா காவல்துறையின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இதனால் கொஞ்சம் பின்வாங்கிய ஆந்திரா காவல்துறை, இவர்களை ரேணிகுண்டா தாசில்தார் முன் நிறுத்தி சொந்த ஜாமினில் அனுப்பிவிடுங்கள் என ஆந்திரா அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 84 தமிழர்களையும் சொந்த பிணையில் விடுவிக்க வாய்ப்பு என்றார் கடப்பா காவல்துறை எஸ்.பி ரவிசங்கர்.

 


கைதானவர்களிடமிருந்து கைரேகைகள் பதிவு செய்துக்கொண்ட கடப்பா போலிஸ், அவர்கள் மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லாததால் வேறு வழக்குகளில் கைது செய்யவில்லை. ரேணிகுண்டா தாசில்தாரும், மாஜிஸ்ட்ரேட் பதவி வகிப்பவருமான நரசிம்மநாயுடு முன் நிறுத்தப்பட்ட தமிழக கூலி மக்களிடம், இனி இங்கு வரக்கூடாது எனச்சொல்லி சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களை இன்று மார்ச் 3-ந்தேதி மதியம் 2 மணியளவில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.