இதனிடையே பக்தர்களின் வழிபாட்டிற்குரிய சிறப்புகளைக் கொண்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான நான்கு சிலைகள் கடந்த 1982 ஏப்ரல் மாதம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவில் கருவறையின் இரும்புக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்போதைய கோவில் டிரஸ்டியான பாபநாச முதலியார் கல்லிடைக்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பல நூறு ஆண்டுகள் பழமையான இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. இரண்டு அடி உயரம் கொண்ட சிவகாமி அம்பாள் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீபலிநாயகர் என்று ஐம்பொன் சிலைகள் திருடு போனதும் அவைகளில் நடராஜர் சிலை மட்டும் 30 கோடி மதிப்புள்ளது என்றும் தெரிய வந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இது நிலுவையில் வைக்கப்பட்டது. பின்னர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலின் குழுவினர் கோவிலை ஆராய்ந்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர். மேலும் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் போன்றவைகளை ஆய்வு செய்து அவைகளின் பாதுகாப்பற்ற தன்மையை தெரிந்து கொண்டார். இதனால் மீதமுள்ள 17 சிலைகள் அருகிலுள்ள சுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் பின் ஐ.ஜி.யின் விசாரணையில் கொள்ளை போன சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வர, அதனை மத்திய அரசின் உதவியோடு மீட்டனர். ஆஸ்திரேலியா சென்ற சிலை தடுப்பு பிரிவினர் அருங்காட்சியப் பதிவாளர் ஜேன் ராபின்சன், மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜர் சிலையப் பெற்றனர். பின்னர் அது டெல்லி கொண்டு வரப்பட்டு பின்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு அதன் பின் நடராஜர், மக்களின் வழிபாட்டிற்காக கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலையம் கொண்டு வரப்படுகிறார்.
இந்நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலயத்திற்கு இன்று காலை வந்த பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மக்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்தனர். சென்னை வந்த சிலையை நெல்லை மாவட்டம் கல்லிடக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நடராஜர் சிலையின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலை. பின்னர் டெல்லியிலிருந்து ரயிலின் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த சிலையை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டுள்ளனர்.