திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.13 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர்.

குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் ஆந்திர மாநில எல்லை என்பதால், சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆந்திர மாநிலத்திற்கு ரயில் வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவச் சிகிச்சைக்கு பின் கடந்த 19/07/2025 அன்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

இன்றோடு 14 நாட்களாக தனிப்படை போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை வருகின்ற ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இதே நபர் போன்ற உருவ ஒற்றுமை மற்றும் உடை ஒற்றுமை உடைய நபரை பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரே உருவ ஒற்றுமை இருப்பதால் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுமி தரப்பும் உறுதி செய்த நிலையில் அந்த நபர்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.