தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்தத் துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்த சூழலில் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென்கிழக்கில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மூன்று விசைப் படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்குப் பின், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதில் மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலில் விலங்கிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 31 மீனவர்களை மீண்டும் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழக மீனவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது, கைகள், கால்களில் விலங்கு போடப்பட்டு, சிறை அதிகாரிகளால் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வீடியோ எடுத்த ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனை யாழ்பாண சிறையின் அதிகாரிகள் கேமராவைத் தட்டிவிட்டு மிரட்டியுள்ளனர். மேலும், அவர் மீது வழக்கு போடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்துள்ள அந்தப் பகுதி பத்திரிகையாளர்கள், சிறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/18/5-2025-11-18-16-36-13.jpg)
இந்த நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்ட மீனவர் மாணிக்கவேல் காலில் விலங்கிடப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பல காலமாகவே, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதனால், இந்திய அரசு, இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/4-2025-11-18-16-36-03.jpg)