உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவரின் ஓய்வூதிய விழாவை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் டிரம் தாளங்களுக்கு ஏற்றவாறு நடனமாடியது தொடர்பான வீடியோ வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் அவர்களைப் புறக்கணித்து உள்ளேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளானர். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில், மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் டியூட்டி ரூமுக்குள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காந்த்லா சமூக சுகாதார மையத்தில் (CHC) அக்பர் சித்திக் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்தச் சுகாதார மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

Advertisment

இந்தச் சூழலில், மருத்துவர் அக்பர் சித்திக் தனது வருங்கால மனைவியுடன் டியூட்டி ரூமுக்குள் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார். அக்பர் சித்திக்கிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதனை கொண்டாடும் வகையில் இருவரும் இந்தி பாடலுக்கு நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, படு வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் “ஒரு மருத்துவர் தனது டியூட்டி ரூமுக்குள் வருங்கால மனைவியுடன் நடனமாடுவது சரியா? பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி விளக்கம் கேட்டு மருத்துவர் அக்பர் சித்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment