G.K. Vasan holds seat sharing talks with Edappadi Palaniswami
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இது ஒருபுறமிருக்க ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் குழு அமைத்து தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களாக கூட்டணி கட்சிகளை நேரில் அழைத்து திமுக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 6 தொகுதிகளை ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us