கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சமீர் என்கிற பி.கே. இனந்தர். ரவுடியான சமீர் மீது காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமன் காலனியைச் சேர்ந்த 25 வயதான தயபா என்ற இளம்பெண்ணும் சமீரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அதன் காரணமாக திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவ்-இன் உறவில் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி காலை கோல்கும்பாஸ் காவல்நிலையம் சென்ற தயபா, “எனது காதலனை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன்” என்று கூறி அனைவரையும் அதிரவைத்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தயபாவை அழைத்துக்கொண்டு அவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் சென்றனர். அங்கு காதலன் சமீர் சடலமாகக் கிடந்தார். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தயபாவிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தயபாவும் சமீரும் காதலித்த நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் முறையில் வாழ முடிவெடுத்தனர். இதனைத் தயபா தனது சகோதரர் அஸ்லாம் பகவானிடம் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அஸ்லாம் பகவான் அமன் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தார். அதில் தயபாவும் அவரது காதலன் சமீரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டுக்கு முன்பு தயபாவும் சமீரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தனர். அதனால் அமன் காலனியில் இருக்கும் வீட்டுக்கு சமீர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். ஆனால் அப்படி வரும்போதெல்லாம் தயபாவிடம் தகராறு செய்து கடுமையாகத் தாக்கி, அடித்து துன்புறுத்திவிட்டுச் சென்றுவிடுவாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தயபா சமீரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார்.
அதன்படி கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு அமன் காலனியில் உள்ள வீட்டுக்கு வந்த சமீர் தயபாவிடம் மீண்டும் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயபா, சகோதரர் அஸ்லாமை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து சமீரின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அஸ்லாம் அங்கிருந்து தப்பிச் செல்ல, மறுநாள் காலையில் தயபா காவல்நிலையத்தில் சரணடைந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தயபா மற்றும் அவரது சகோதரர் அஸ்லாம் பகவான் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அடித்து தாக்கி வந்த காதலனை காதலியே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/4-2025-11-18-18-24-51.jpg)