அசாம் மாநிலம் கசார் மாவட்டத்தில் உள்ள பைலபுல் பகுதியில் சந்தை ஒன்று உள்ளது. அதன் அருகில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மறைந்த ஜவஹர்லால் நேருவின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில், சந்தையின் அருகே அமைந்துள்ள நேருவின் சிலையைக் கடந்த 23ஆம் தேதி இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் புல்டோசரை பயன்படுத்தி இடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, இந்த சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புல்டோசரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய புல்டோசர் டிரைவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisment

அசாம் மாநிலத்தில் வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 126 என்பது குறிப்பிடத்தக்கது.