காரில் சென்ற காவலருக்கு வெட்டு; மனைவியிடம் கைவரிசை - நள்ளிரவில் பயங்கரம்!

102

 

கோவையில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வருபவர் பார்த்திபன். இவர் நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் கோவை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென காரை வழிமறித்துள்ளனர். உடனே காரை நிறுத்திய பார்த்திபனை, மூன்று பேரும் தங்களிடம் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அவரது தலையில் வெட்டியுள்ளனர். அத்துடன், பார்த்திபனின் மனைவியிடம் இருந்த தாலிச் செயின், மோதிரம் மற்றும் கைவளையல் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெட்டுப்பட்ட பார்த்திபனை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் காவலரைத் தாக்கிவிட்டு, அவரது மனைவியிடம் இருந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore
இதையும் படியுங்கள்
Subscribe