பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டம் ஜோடி போகர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். இவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு, காவல்துறை பணியில் சேர்வதற்காகத் தயாராகி வந்தார். இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நூலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த கும்பல் ஒன்று இவரைக் கடத்தியது. தப்பிக்க முயன்ற இவர், உதவி கேட்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த, அந்த கடத்தல் கும்பல் இவரை சரமாரியாகத் தாக்கியது. மேலும், இவரது வாயில் மதுவை ஊற்றியதால் அவர் மயக்கமடைந்தார். 

Advertisment

பின்னர், அவர் மோர்வாலில் உள்ள கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, லட்சுமி என்ற இளம் பெண் மணக்கோலத்தில் இருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்தனர். பின்னர், நிதிஷுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு, லட்சுமியுடன் கட்டாயமாகத் திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்தின் போது மயக்க நிலையில் இருந்ததால், நிதிஷால் அப்பெண்ணுக்கு மாலை கூட அணிவிக்க முடியவில்லை. அப்போது, அருகில் இருந்த ஒரு நபர், அவரின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக மாலை அணிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சக்ராஜா அலி கிராமத்தில் அரங்கேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், நூலகத்திற்குச் சென்ற தனது மகன், வீடு திரும்ப வில்லை என நிதிஷின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் நிதிஷின் திருமணம் சம்பந்தமான வீடியோவை பார்த்த காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், சக்ராஜா அலி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராய் என்பவர் தான் நிதிஷை கடத்தி தனது மகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர், காவல்துறையினர் சக்ராஜா அலி கிராமத்திற்குச் சென்று, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிதிஷை மீட்டனர். இதையடுத்து, நிதிஷை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினரை காவல்துறை கைது செய்தது. தற்போது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்று, இளைஞர்களைக் கடத்தி, திருமணம் செய்து வைக்கும் சம்பவம் பீகாரில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, படித்த மற்றும் அரசுப் பணியில் உள்ள இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2009 ம் ஆண்டு முதல் இதுவரை 1224 இளைஞர்களைக் கடத்தி சென்று இவ்வாறு கட்டாய திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment