From shoe-throwing to machete-throwing: The security of the judiciary is in question Photograph: (police)
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் வளாகத்தில் 2025 அக்டோபரில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர் நேரடியாக நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்த முயன்றது, நீதித்துறையின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்து கேள்விகளை எழுப்பியது. அந்தச் சம்பவத்தில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பரந்த அளவில் தடுப்பு நடவடிக்கைகள் அல்லது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. அந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து நாடு மீளாத நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீச்சு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் குடும்ப நீதிமன்றத்தில், நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது குடும்பத் தகராறு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்த நிலையில், நீதிமன்றத்திலேயே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தீர்ப்பை ஏற்க முடியாமல் கோபமடைந்த அவர், தன்னுடன் கொண்டு வந்த அரிவாளை நீதிபதியை நோக்கி வீசினார். நீதிபதி சுதாகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக பாலமுருகனைக் கைது செய்தனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு சவால்
நீதித்துறை, ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தீர்ப்பில் ஏமாற்றம் அல்லது கருத்து வேறுபாடு இருப்பது இயல்பு. ஆனால் அதற்குப் பதிலாக வன்முறைத் தாக்குதல்களைத் தேர்வு செய்வது சட்ட ஒழுங்கு மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் அடித்தளத்தையே பாதிக்கும் செயலாகும்.
டெல்லியில் நடந்த செருப்பு வீச்சு சம்பவத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த அரிவாள் வீச்சு வரை ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சி, நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. முன்பு நடந்த சம்பவங்களில் கடுமையான முன்னெச்சரிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததே, இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெற வழிவகுக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
நீதிமன்றம் என்பது கருத்து மோதல்களின் இடமல்ல; சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தும் இடம். அதற்கான மரியாதையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
Follow Us