Four people including a woman arrested on Gold smuggled from Dubai
துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று (03-02-26) நள்ளிரவு முதல் சென்னை பன்னாட்டு விமான நிலையம் தீவிர கண்காணிப்பிலிருந்து வந்தது. அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டனர். அப்போது துபாயிலிருந்து சென்னை வந்த பெண் பயணியை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், அப்பெண் மறைத்து வைத்திருந்த பசை வடிவிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.37 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் சோதனை துரிதப்படுத்தப்பட்டது. இந்த சோதனையில், அடுத்தடுத்த மூன்று நபர்கள் மறைத்து வைத்திருந்த ஹவாலா பணம் மற்றும் தங்க நகைகளும் மத்திய புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து பயணிகளிடம் மேற்கொண்ட சோதனையில் ரூ.4.09 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Follow Us