கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களைத் திறந்தாலே, ‘ஏங்க... கூமாபட்டி வாங்க... மினி ஐலாண்டுங்க இது...’ என்று ஒரு வீடியோ காட்டுத் தீயாகப் பரவி வந்தது. மூன்று பக்கங்களில் மலைகளால் சூழப்பட்ட அழகிய கிராமம் என்று அந்த வீடியோவில் தங்கப்பாண்டியன் என்ற இளைஞர் பேசியதை நம்பி, நெட்டிசன்கள் பலரும் கூகுள் மேப்பில் தேடத் தொடங்கினர். இன்னும் சிலரோ உணவுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்திற்கே பயணம் மேற்கொண்டனர். ஆனால், இளைஞர் கூறியதை நம்பி பொதுமக்கள் யாரும் கூமாபட்டி வந்து ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், அணையில் குளிக்கவோ மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் கூமாபட்டிக்கு சென்றது குறித்து பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்.எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே. மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம். கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.