அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கலில் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்வராஜூக்கு செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில், அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், செங்கோட்டையன் பதவி நீக்கப்பட்டதால், தங்களுக்கும் பதவிகள் வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்த நடவடிக்கையாக, முன்னாள் எம்.பி. சத்யபாமாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சத்யபாமா வகித்து வந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.