திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அறநிலையத் துறையை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலையில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று (ஜூலை 16)காலைஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்டஅண்ணா சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், திருப்பத்தூர் மாவட்ட அதிமுகசெயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் அரசையும், மாநகராட்சியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியை சூழந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கீழே இறக்கி கைது செய்யத் தொடங்கினர். போராட்டம் முடிந்ததும் கைதாகிறோம் என்று சொல்லியும் போலீஸார் கேட்காததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட திமுக தலைவர்களும், தொண்டர்களும் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.