Former AIADMK minister Nilofer Kapil joins DMK
சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவடந்தை, திருப்பத்தூர், மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இந்த மண்டல மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 11ஆம் தேதி திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு (11-02-26) காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 49 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் பயிற்சி மாநாடு இன்று (14-02-26) மாலை நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். இதையடுத்து மாநாட்டு மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அப்போது முன்னாள் அதிமுக பெண் அமைச்சரான நிலோஃபர் கபில், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மாநாடு நடைபெறுவதற்கு முன்பு திமுக மாநாடு திடலுக்கு திமுக பேட்ஜ அணிந்து நிலேஃபர் கபில் வந்தார். அதனை தொடர்ந்து அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதிமுகவில் கட்சி செயல்பாடுகளில் தீவிரம் காட்டாமல் இருந்த நிலோஃபர் கபில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
Follow Us