Former AIADMK councilor's wife CASE; background given by Bagir - relatives accuse Photograph: (ADMK)
கோவையில் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மனைவி வாகன ஓட்டுநரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Advertisment
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியின் முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமானவர் கவி சரவணகுமார். தன்னுடைய மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வருகிறார். 47 வயதான மகேஸ்வரியை நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த சுரேஷ் பவர் மகேஸ்வரியை கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிச் சென்றவர் வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Advertisment
மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்து வீட்டிற்கு வந்த கவி சரவணகுமார் தடாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரி உடலில் மீட்டு பிரேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் வாகன ஓட்டுநர் சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவம் நடந்த அன்று மகேஸ்வரிவுடன் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மகேஸ்வரியின் உறவினர்கள் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர். ஏற்கனவே மகேஸ்வரியின் கணவர் கவி சரவணனுக்கும் அவருக்கும் தகராறு இருந்த நிலையில் திட்டமிட்டு கவி சரவணகுமாரால் நடத்தப்பட்ட கொலை என மகேஸ்வரியின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் தடாகம் பகுதியில் கவி சரவணகுமார் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார். அனுமதியின்றி செயல்பட்டதால் அந்தப் பகுதியில் உள்ள 184 செங்கல் சூளைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது. இதில் கவி சரவணகுமார் நடத்திய சூளைக்கும் சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்த பலரும் வெவ்வேறு மாவட்டங்களில் செங்கல் சூளை அமைத்தனர்.
அதேபோல் கவி சரவணகுமாரும் வெவ்வேறு மாவட்டங்களில் செங்கல் சூளை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. செங்கல் சூளையை காரணம் காட்டி கவி சரவணகுமார் வீட்டுக்கு வராமல் இருப்பதோடு பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இதனால் மகேஸ்வரிக்கும் கவி சரவணகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடு முழுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட நாளில் மட்டும் வீட்டில் இருந்த அனைத்து கேமராக்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் இது வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிகழ்வு அல்ல திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மகேஸ்வரியின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் கொலைக்கான முழு காரணம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Follow Us