'For me, Tamil Nadu is out of control..' - Udhayanidhi's speech Photograph: (dmk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''வெற்றுக் கூச்சல் போடுகின்ற ஒரு கூட்டம் இன்னைக்கு தமிழ்நாட்டில சுத்திக்கிட்டு இருக்கு. அவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது. இதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள். அதே மாதிரி திருவிழா நேரத்தில் புது புது கடைகள் எல்லாம் போடுவாங்க. மக்களை கூப்பிட்டு பொய் விளம்பரம் சொல்லி பொய் வியாபாரம் எல்லாம் பண்ணுவாங்க. பலூன் எல்லாம் ஊதி குழந்தைகளுக்கு எல்லாம் ஷோ காட்டுவாங்க. அது மாதிரிதான் இன்னைக்கு தேர்தல் வந்தவுடனே தேர்தல் திருவிழா வந்து விட்டதால் தமிழ்நாட்டில புதுசு புதுசாக கடைவிரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. எப்படி திருவிழா டைமில் போட்ட கடையெல்லாம் திருவிழா முடிஞ்ச உடனே காணாமல் போயிடும். அதேமாதிரி இந்த தேர்தல் முடிஞ்சதும் அந்த கடைகள் அனைத்தும் காலி ஆயிடும்.
ஆனால் திமுக தான் என்னைக்குமே மக்களோடு மக்களாக நின்றிருக்கும். அது மட்டுமல்ல திருவிழா கூட்டத்தில் பிள்ளை பிடிக்கிற கோஷ்டி, பிக் பாக்கெட் அடிக்கிற கோஷ்டியும் உள்ள வருவாங்க. மிட்டாய் வாங்கி தரேன், ஐஸ்கிரீம் வாங்கி தரேன், சாக்லேட் வாங்கி தரேன்னு குழந்தைகளை கடத்த பார்ப்பார்கள். இப்போ அதேமாதிரி ஆரம்பிச்சிருக்காங்க. இப்ப இ.டி கேஸில் இருந்து நான் காப்பாற்றுகிறேன், ஃபெரா கேஸில் இருந்து நான் உங்களை காப்பாற்றுகிறேன் மெடிக்கல் காலேஜ் கேஸ் ஊழலில் இருந்து நான் உங்களை காப்பாற்றுகிறேன். சம்மந்தி டெண்டர் எடுத்த கேஸை நான் முடிச்சு தரேன் இப்படி வழக்குகளை எல்லாம் காட்டி காட்டி இன்னைக்கு அடிமை கூட்டத்தை பாசிஸ்டுகள் தூக்கி இருக்காங்க.
இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டன் எந்த ஊட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான். ஏன்னா எங்களை வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஒரு தலைவர். பாசிஸ்ட்கள் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் சரி தமிழ்நாடு என்னைக்குமே உங்க கையில சிக்காது. ஏன்னா எங்க தலைவர் அடிக்கடி சொல்வது போல் 'தமிழ்நாடு என்னைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்' தான்'' என்றார்.
Follow Us