புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பாசுதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை அவரது உறவினர் புகாரி நிர்வகித்து வருகிறார். இந்த படகில் மீன்பிடிக்கச் செல்ல நிரந்தரமான மீனவர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் படகு கடலுக்கு செல்லும் நேரத்தில் அந்தப் பகுதியில் நிற்கும் மீனவர்களை கடலுக்குள் அழைத்துச் செல்வது வழக்கம். அதே போல, கடந்த 1ஆம் தேதி (புதன்கிழமை) கோட்டைப்பட்டனம் மீன்பிடி தளத்தில் இருந்து அனைத்து விசைப்படகுகளும் கடலுக்குள் சென்றது. அதில் புகாரி நிர்வகிக்கும் விசைப்படகிற்கு ஆள் இல்லாததால் அங்கு நின்ற ராமநாதபுரம் உச்சிப்புளியைச் சேர்ந்த சேதுபாண்டியன் (வயது62), வயது முதிர்வால் பல வருடங்களாக விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்லாமல் ஒதுங்கி இருந்த அன்று கடற்கரையில் நின்ற கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 62), நாட்டுப்படகு மீனவர் செல்வராஜ் (வயது 70) மற்றும் ராமநாதபுரம் காரங்காடு கிராமத்தில் இருந்து அன்று கோட்டைப்பட்டினம் வந்த அருளாந்து (வயது 62) ஆகிய வயதான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த விசைப்படகை சேதுபாண்டி ஓட்டியுள்ளார்.
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, செல்வராஜ், அருளாந்து ஆகியோர் வயது முதிர்வால் சரியாக வலை இழுக்க முடியவில்லை என்பதால் படகு ஓட்டுநர் சேதுபாண்டியனும் சேர்ந்து வலை இழுத்து மீன்களை சேகரித்துள்ளார். இதனால் சேதுபாண்டியனும், பன்னீர்செல்வமும் மற்ற இரு மீனவர்களும் வேலை செய்யவில்லை என்று திட்டி சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு மீனவர் அருளாந்து இல்லாமல் மற்ற 3 மீனவர்களும் கரைக்கு திரும்பி உள்ளனர். அருளாந்து கரை திரும்பவில்லை என்பதையும் யாரிடமும் சொல்லவில்லை. இந்த நேரத்தில் நடுக்கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் அருளாந்து நடுக்கடலில் தத்தளித்த போது ராமநாதபுரம் மீனவர்களால் மீட்கப்பட்தாக மீமிசல் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் கிடைக்க எஸ்.ஐ ராமராஜன் உள்ளிட்ட போலிசார் கோட்டைப்பட்டினம் சென்று விசாரித்தனர்.
அப்போது அனைத்து படகுகளும் கரை திரும்பிவிட்டது. அனைவரும் வந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், கோட்டைப்பட்டினம் படகில் சென்றவர் தான் கடலில் தத்தளித்தது என்று மீண்டும் தகவல் வந்ததுடன் கடலில் இருந்து மீண்டு வந்த அருளாந்து மீமிசல் கடலோரக் காவல் நிலையம் வந்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், 1ஆம் தேதி நான் கடற்கரையில் நின்றவனை ஒரு படகில் ஆள் பத்தவில்லை என்று என்னை சேதுபாண்டியன் அழைத்துச் சென்றார். நடுக்கடலில் பிரச்சனை வந்தது. நான் வலையில் உக்காந்து இருந்தேன். அதிகாலை 3 மணிக்கு என்னை கடலுக்குள் தள்ளிவிட்டு வேகமா வநதுட்டாங்க. எனக்கு நீச்சல் தெரிந்ததால் 4 மணி நேரம் நடுக்கடலில் தண்ணியில் தத்தளித்தேன். காலையில் அந்த வழியாக வந்த ராமநாதபுரம் மீன்பிடி படகில் இருந்தவர்கள் என்னை மீட்டு கரைக்கு கூட்டி வந்தாங்க. என்னை கடலில் தள்ளிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மீமிசல் கடலோர காவல் உதவி ஆய்வாளர் ராமராஜன் உள்ளிட்ட போலீசார் கோட்டைப்பட்டினத்திற்கு சென்று மீண்டும் விசாரித்தனர். அப்போது சேதுபாண்டியன் ஓட்டிய விசைப்படகிற்கு 4 டோக்கன் வாங்கி கடலுக்குள் சென்று 3 பேர் மட்டும் கரை திரும்பியது தெரிய வந்தது. அதனையடுத்து சேதுபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் நாங்கள் கடலில் தள்ளவில்லை வலையில் அமர்ந்திருந்தவர் வழுக்கி கடலில் விழுந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விசாரனையைத் தொடர்ந்து மீனவர்கள் சேதுபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி உள்ளனர்.சக மீனவர் கடலில் தத்தளித்த போது அவரை மீட்காமல் கரை திரும்பிய மீனவர்கள் அது பற்றி வெளியே சொல்லாமல் மறைத்தது ஏன் என்று சக மீனவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.