விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அண்மையாகவே அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகேயுள்ள சின்ன காமன்பட்டியல் செயல்பட்டு வரும் 'கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ்' என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணிகள் தொடங்கிய பொழுது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.
இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் வானுயர சூழ்ந்தது. பட்டாசு ஆலையில் பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் முதற்கட்டமாக 4 பேர் 90 சதவீதம் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் முதற்கட்டமாக ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டுள்ள தீயணைப்புத் துறையினர் உள்ளே மேலும் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்து சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.