fire incident - police investigating Photograph: (police)
தீ விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அத்தாணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் சரண் (8). 3-ம் வகுப்பு படித்து வந்தார். சரண் மற்றும் உறவினர்களின் குழந்தைகள் என 4 பேரும், கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி தென்னை மட்டை மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் கேன் கீழே விழுந்ததில், மண்ணெண்ணெய் சரண் மீது தெறித்து அவன் மீது தீப்பற்றிக் கொண்டது. இதனால் வேதனை தாங்காமல் சிறுவன் சரண் அலறினான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் சிறுவன் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த சரணை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரண் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில், நேற்று சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Follow Us