தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், சிவசங்கர் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Advertisment

அப்போது பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். கொரோனா கால நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. தமிழகம் நான்கரை ஆண்டு காலத்தில் பெரும் இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்துள்ளது. நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசு இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டது. வருவாய்ப் பற்றாக்குறையும் நிதிப்பற்றாக்குறையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. ஒரு லட்சம் பேருக்கு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் வருகைப் பதிவு 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10.28 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 16 நியோ டைடல் பார்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.6,158 கோடியில் வடசென்னையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3,700 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன; 2,200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 70,400 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது,” என்றார்.