நாமக்கல்லில் பட்டப்பகலில் நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வசித்து வருபவர் அருள்தாஸ் (45) நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல இன்று காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அருள்தாஸ், 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மேல் ஈச்சனாரி பகுதியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக அருள்தாஸை வெட்டி உள்ளனர்.
இதில் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அருள்தாஸ் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு கூச்சலிட்ட நிலையில் அந்த நபர்கள் ஆட்டோ மற்றும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மோகனூர் போலீசார் படுகாயம் அடைந்த அருள்தாஸை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சரக்கு ஆட்டோ மற்றும் அரிவாள்களை வைத்து கொலையை நிகழ்த்திய நபர்கள் யார் என்பது குறித்தும் கொள்ளைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.