Father forced son to write NEET exam and act committed by son
உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). இவர் மருந்து தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கை (21), மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுத வற்புறுத்தி வந்துள்ளார். இதில் அக்சத்திற்கு விருப்பம் இல்லாத காரணத்தினால், இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால், மன்வேந்திர சிங் விடாமல் அவரை வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக, இவர்கள் இருவருக்குமிடையே தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், மன்வேந்தரின் வற்புறுத்தல் காரணமாக ஒரு முறை அக்சத் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அக்சத், தனது தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதையடுத்து, அந்த உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து சதருனா பகுதியில் வீசியுள்ளார். உடலின் எஞ்சிய பக்கங்களை வீட்டில் உள்ள நீல நிற டபராவில் மறைத்து வைத்தார். இந்த சம்பவத்தைப் பார்த்த தனது தங்கையிடம், இது பற்றி வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, மன்வேந்திர சிங் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து, பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அக்சத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், அவர் தனது தந்தையைச் சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டார். தனது தந்தை தொடர்ந்து நீட் தேர்வு எழுத வற்புறுத்தியதால் தான் இந்த கொலையைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில், மன்வேந்திர சிங்கின் தலை இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மன்வேந்திரா சிங் குடும்பத்தினர் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதோடு, மன்வேந்திராவின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us