நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில், மாவட்ட அளவில் 15,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், முதல் தாள் தேர்வை 3,590 பேர் எழுதியுள்ளனர். அடுத்தநாள் நெல்லை நகரம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது.

Advertisment

இந்தத் தேர்வின் மையங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், பட்டதாரித் தமிழாசிரியரான தந்தையும், அவரது மகனும் ஒரே நேரத்தில் தகுதித் தேர்வை எழுதியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 50 வயதான இவர், மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2011ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக, இந்த தகுதி தேர்வை எழுத விண்ணப்பித்தார்.

அதே போல, 22 வயதான அவரது மகன் தானிஷ் என்பவரும், புதிய ஆசிரியப் பணியிடத்தை நாடி இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கக்கட்டது. எனவே தந்தை மகன் இருவரும் உற்சாகமுடன் இந்த தேர்வை ஒரே மையத்தில் எழுதினார்கள்.

Advertisment

இதுகுறித்து உமர் பாரூக் கூறுகையில், "எனக்கு 50 வயதாகிறது. மத்திய அரசின் கல்வி கொள்கை மூலம் 2011 ஆம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவால்.. நான் தேர்வு எழுதுகிறேன். எனது மகனும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுகிறார். நானும், எனது மகனும் ஒரே நேரத்தில் ஆசிரியத் தகுதித் தேர்வை எழுதுவது ஒருபுறம் நெருடலாக இருந்தாலும், மறுபுறம் உற்சாகமாக உள்ளது.

எனது வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் எனது மகனுக்கு புதிய ஆசிரியர் பணி கிடைக்கவும் இருவரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதுகிறோம். ''தந்தை மகற்காற்றும் உதவி, அவையத்து முந்தி இருப்பச் செயல்'' என்ற திருக்குறள் வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது மகன் 10ஆம் வகுப்பு படித்த போது நான் அவனுக்கு வகுப்பாசிரியராக இருந்தேன். இன்று அதே மகனுடன் சக ஆசிரியராக தேர்வெழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக'' தெரிவித்துள்ளார்.