Farmers protest after bundles of turmeric stuck in private godown Photograph: (கோப்புப்படம்)
சித்தோடு அருகே இருப்பு வைத்த 3,666 மஞ்சள் மூட்டைகளை திரும்ப தர வலியுறுத்தி விவசாயிகள் குடோனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு அருகே அனுமன்பள்ளியை சேர்ந்த விவசாயி பாரதிராஜா (43) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10 -க்கும் மேற்பட்டோர் தலா 65 கிலோ எடையுள்ள 3,666 மஞ்சள் மூட்டைகளை, சித்தோடு நசியனூர் பகுதியில் உள்ள ஒருவரது குடோனில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருப்பு வைத்துள்ளனர். இதற்கு ரூ.55 ஆயிரம் மாத வாடகை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். மஞ்சள் விலை கடந்த ஆண்டை விட தற்போது அதிக விலை போகிறது. மஞ்சள் விலை கிலோ ரூ.150 முதல் விற்பனையாவதால் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சளை விற்பனை செய்ய பாரதிராஜா மற்றும் விவசாயிகள் முயன்றனர்.
ஆனால் குடோன் நடத்தி வந்தவர் முறையாக பதில் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாகக் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு மஞ்சள் மூட்டைகளை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் மூட்டைகளை தங்களிடம் ஒப்படைக்க கூறி குடோன் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், எட்வின் டேவிட், ஸ்டெல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் தான் கடந்த ஓராண்டாக விற்பனை செய்யாமல் குடோனில் இருப்பு வைத்தோம். தற்போது மஞ்சள் விலை உயர்ந்து வரும் நிலையில் மஞ்சள் முட்டைகளை விற்பனை செய்ய முயன்றபோது குடோன் உரிமையாளர் மஞ்சள் மூட்டைகளை தர மறுக்கிறார். குடோனில் மஞ்சள் முட்டைகளை என்ன செய்தார் என்று தெரியவில்லை. மேலும் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் முட்டைகள் குறித்து எவ்வித பதிலும் சொல்ல மறுக்கிறார். எனவே நாங்கள் இருப்பு வைத்த 3,666 மஞ்சள் மூட்டைகளை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து உரிமையாளர் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Follow Us