farmers in tears because Crops wither without water
கடந்த மாதம் காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான நெல் மணிகளை அறுவடை செய்யும் முன்பே கன மழை பெய்து நெல் பயிர்களை தண்ணீரில் மூழ்கடித்து நாசம் செய்தது. இனி அறுவடையே செய்ய முடியாது, நெல் மணிகள் முளைத்துவிட்டது என்று பல ஏக்கர் நெல் பயிர்கள் டிராக்டர் மூலம் வயலில் உழவு செய்யப்பட்ட கண்ணீர் சம்பவங்கள் நடந்தது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் மழைத் தண்ணீரை மட்டுமே நம்பி நேரடி விதைப்பு மூலம் விவசாயம் செய்த பல நூறு ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிக் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கண்ணீரும் வேதனையுமாக உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, ‘ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில், மணமேல்குடி, அறந்தாங்கி ஒன்றியங்களில் கல்லணைத் தண்ணீர் பாயாத பல நூறு கிராமங்களில் மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடக்கிறது. மழைத் தண்ணீரை கன்மாய்களில் சேமித்து வைத்து விவசாயம் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டும் வழக்கம் போல மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நெல் மணிககளை விதைச்சாச்சு. ஆனால் பருவ மழை பெய்யவில்லை இதனால் கன்மாய்களும் வறண்டு கிடக்கிறது. முளைத்த நெல் பயிர்களும் கருகிக் கிடக்கிறது. இனி மேல் மழை பெய்தாலும் இந்த பயிர்கள் உயிர் பிழைக்காது. இதே போல ஒவ்வொரு வருடமும் மழையை நம்பி விவசாயம் ஒன்று மழை பெய்து கெடுக்கிறது இல்லை என்றால் மழை பெய்யாமல் கெடுக்கிறது. இந்த கருகிய பயிர்களை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை அடைக்க அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று வேதனையோடு தெரிவித்தனர்.
Follow Us